'திராவிட மாடல் அரசு' அம்பேத்கரின் எண்ணங்களை பிசகாமல் நிறைவேற்றுகிறது..! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை : அம்பேத்கர் கனவை செயலாக்கும் வகையில் திமுகவின் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினத்தவர் பிரிவின் சார்பாக 'தலித் உண்மைகள்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு இந்த புத்தகத்தை வெளியிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மோவானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின் பேச்சு
புத்தகத்தை வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், " திமுக தமிழ்நாட்டில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான சமூக நீதியை முறையாக நிறைவேற்ற எதிர்கட்சியாக இருந்தபோதும் போராடி பல தியாகம் செய்துள்ளோம். பட்டியலின, பழங்குடியினருக்கு கல்வி வேலைவாய்ப்பில் 16-லிருந்து 18 ஆக இட ஒதுக்கீட்டை 1971-ல் கருணாநிதி உயர்த்தினார். 1989-ல் பழங்குடியினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியது.

அம்பேத்கர் கனவு
2009-ல் அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியது திமுகதான். நாட்டில் அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலை முதலில் அமைத்தது திமுகதான். சமத்துவபுரம் தாட்கோ, புதிரை வண்ணார் , தூய்மை பணியாளர் நல வாரியங்கள் அமைத்தது திமுக. அம்பேத்கரின் கனவை செயலாக்கும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி இவை நான்கும் இணைந்து பயணிக்கும் குடியரசாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே அம்பேத்கர் கனவு.

அருந்திதியருக்கு உள் ஒதுக்கீடு
திமுக தமிழ்நாட்டில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான சமூக நீதியை முறையாக நிறைவேற்ற எதிர்கட்சியாக இருந்தபோதும் போராடி பல தியாகம் செய்துள்ளோம். நாடு வளர மாநிலமும், மாநிலம் வளர மாவட்டமும், மாவட்டம் வளர கிராமங்களும் வளர வேண்டும். சமூகநீதி, சமத்துவ பூங்காவாக மாறினால்தான் உலகின் வல்லரசாகவும், நல்லரசாகவும் இந்தியா மாறும்.

பகுத்தறிவு படங்கள்
கருணாநிதியின் ஒரே ரத்தம் படத்தில் நந்தக்குமாராக நானும் நடித்தேன். கதாபாத்திரத்தின் பெயரே நான் யார் என்பதை எடுத்து சொல்லும். அருண்ராஜா காமாராஜ் இயக்கிய உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை நேற்று முன்தினம் பார்த்தேன். பட்டியலின மக்களுக்கான உரிமையை பேசும் சிறப்பான படமாக இருக்கிறது. மதவாத ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தற்போது பகுத்தறிவு படங்களை அதிகம் எடுக்க வேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications