சென்னையில் நிரம்பி வரும் மருத்துவமனைகள்.. மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்!
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வருகிறது. இதனால் புதிதாக பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு கல்லூரிகள் கொரோனா வார்டுகளாக மீண்டும் மாற்றப்படுகின்றன.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 6700 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரணடு வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிதிப்புன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரம் என்கிற அளவில் இருந்தது. சென்னையில் 3 ஆயிரம் என்கிற அளவில் இருந்தது.
ஆனால் இன்று 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புடன் தமிழகத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். சென்னையில் மட்டுமே சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

பாதிப்பு உயர்வு ஏன்
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 3 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் என்கிற அளவிற்கு நோயாளிகள் எண்ணிக்கை கடந்த 2 வாரத்தில் உயர்ந்ததற்கு முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி விடாதது போன்றவை முக்கிய காரணங்கள் ஆகும்.

வீடுகளில் பலர்
தற்போதைய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் உள்ளார்கள். மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் சேர்க்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் பல கொரோனா நோயாளிகள் அவதிப்படும் நிலையே உள்ளது.

படுக்கைகள் தேவை
அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வருகிறது. அத்துடன் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகிறது. இதன் காரணமாக புதிய படுக்கை வசதிகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படுக்கைகள் போதாமல் கல்லூரிகள், சமூக நலக்கூடங்கள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டது அதன்பிறகு படிப்படியாக கொரோனா குறைந்ததால் செப்டம்பருக்கு பிறகு அவை எதுவும் தேவைப்படவில்லை. இதனால் அதன்பிறகு கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா வார்டுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

சுவாச வசதிகள்
இந்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகம் எடுத்துள்ளது.. இந்த மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் அது உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துளளனர். து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதார துறை மேற்கொண்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான சிகிச்சை உபகரணங்களை தயார் செய்வது மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக படுக்கை வசதி, செயற்கை சுவாச வசதிகளுடன் கூடிய இடங்களை தயார் செய்வது ஆகியவற்றில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி சென்னையில் உள்ள கல்லூரிகளை மீண்டும் கொரோனா வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாறப்போகும் கல்லூரிகள்
மொத்தம் 11 ஆயிரத்து 875 படுக்கைகளை தயார் செய்யும் வகையில் கல்லூரிகள் மீண்டும் வார்டுகளாக மாறப்போகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறைகளில் 1,500 படுக்கைகள் உருவாக்கப்படுகின்றன. சென்னை ஐ.ஐ.டி.யில் 420 படுக்கைகள், குருநானக் கல்லூரியில் 300 படுக்கைகள், ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரியில் 500 படுக்கைகள், முகமது சதக் நர்சிங் கல்லூரியில் 900 படுக்கைகள் தயார் செய்யப்பட உள்ளன.

வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி
டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில் 230 படுக்கைகளும், பாரதி பெண்கள் மகளிர் கல்லூரியில் 350 படுக்கை வசதிகளும், வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் 400 படுக்கைகள் தயார் செய்யப்பட உள்ளன. அத்திப்பட்டில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 5,130 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விக்டோரியா ஹாலில் 570 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜவஹர் என்ஜினீயரிங் கல்லூரியில் 400 படுக்கைகள், கிண்டியில் உள்ள தேசிய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தில் 225 படுக்கைகள் தயார் செய்யப்படுகிறது.

நோயாளிகள் அதிகம்
இந்த மாத இறுதிக்குள் இந்த கல்லூரிகள் அனைத்தும் கொரோனா வார்டு சிகிச்சை மையங்களாக மாறி தயார் நிலையில் இருக்கும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னைக்கு வரும் டாக்டர்கள்
இதனிடையே சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தேவைப்படும் அளவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு டாக்டர்களை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 150 டாக்டர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வர உள்ளார்கள். காய்ச்சல் முகாம் கடந்த ஆண்டு கொரோனை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகித்தது. அதேபோன்று இந்த முறையும் கைகொடுக்கும் என்று நம்புவோம்.












Click it and Unblock the Notifications