"கலவரத்தை தூண்டுறார்.." திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் புகார்.. ஹைகோர்ட்டில் 'சைபர் க்ரைம்' பதில்
சென்னை: நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டிவிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகி அளித்த புகார், மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையை சேர்ந்த பி.ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார். அதில், "நவம்பர் 6-ம் தேதி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் தொகுதி எம்.பி.யும், விசிக தலைவருமான தொல். திருமாவளவன், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான அவதூறு கருத்துகளை தெரிவித்தார். இதன்மூலம் நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் அவர் தூண்டியுள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் மீது அன்றைய தினமே சென்னை சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபியிடம் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டது. மனுதாரர் அளித்த புகார், மதுரை காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அதனால் மதுரை காவல் ஆணையரை எதிர் மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.
இதையடுத்து, மதுரை காவல் ஆணையரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் ராமசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications