உங்க தலைவரை புகழ.. பட்டியலின மக்களை இழிவுபடுத்துவீங்களா.. அண்ணாமலை மீது.. போலீசில் வன்கொடுமை புகார்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராகக் கடலூரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அண்ணாமலை
இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கடந்த மே 30ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் அவர் பறையரில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) எனக் குறிப்பிட்டு இருந்தார். பறையர் என்ற சொல்லை அண்ணாமலை பயன்படுத்தியது சர்ச்சையானது. இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

வன்கொடுமை தடுப்பு சட்டம்
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் pariah என்ற சொல்லின் பொருளை விளக்கும் வகையில் டிக்சனரியின் ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இருப்பினும், அண்ணாமலை மீது மாநிலத்தில் பல இடங்களில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடலூரிலும் இந்தியக் குடியரசு கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு கட்சி
இது குறித்து கடலூர் விருத்தாசலம் காவல் நிலையத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளர் மங்காபிள்ளை புகார் அளித்துள்ளார். மங்காபிள்ளை தனது புகாரில், "நான் இந்திய குடியரசு கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறேன். கடந்த 30.05 2022 அன்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுக் கால சாதனைகள் குறித்து பெருமையாகப் பதிவிட்டுள்ளார்.

இழிவுபடுத்தி
அந்தப் பதிவில் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை இழிவுபடுத்தும் வகையில், நம்பிக்கையற்ற நிலையிலிருந்து நம்பிக்கையும், இருளிலிருந்து ஒளியையும், பறையரிலிருந்து விஸ்வகுரு (From Paraiah to Vishwakarma) என்று பதிவிட்டிருக்கிறார். மேற்படி பொருளின் பதம் தீண்டத்தகாத பறையனைவிட, விஸ்வகர்மா உயர்ந்த சாதி அளவிற்கு பாஜக வளர்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
Recommended Video

புகார்
பாஜக ஆட்சியின் 8 ஆண்டுக்காலம் மோடி ஆட்சியைப் புகழ்வதற்காக ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களையும் இழிவுபடுத்தியுள்ளதால் எனக்கும் என் சமுதாயத்திற்கும் மன உளைச்சலும், எங்கள் மீது வெறுப்புணர்வு ஏற்படும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே மேற்படி அண்ணாமலை மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 3 (1) (U) பிரிவில் வழக்குப் பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications