எம்ஜிஆர் டூ எடப்பாடி..! அதிமுக இதுவரை சந்தித்த “தர்ம யுத்தங்கள்”! கட்சிக்கு தலைமையேற்கப் போவது யார்?
சென்னை : ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் நிலையில், அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக அதிமுக இதுவரை சந்தித்த தர்மயுத்தங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
வழக்கமாக பிற அணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
வீடியோ லீக்காகுமா? குறுகுறுவென பார்த்த கண்கள்.. அதிமுக கூட்டத்தை அலறடித்த பெண்கள்.. ரொம்ப மோசம்பா!
அதிமுகவில் மோதல்
சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் சசிகலா அணியைச் சேர்ந்த அல்லது சசிகலா ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தில் பிரச்சனை செய்ய வாய்ப்பு இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் யார் யார் பேச வேண்டும் அதில் என்னென்ன பிரச்சினைகள் எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்த ஆலோசனை கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஒற்றைத் தலைமை முழக்கம்
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் திடீர் முழக்கமிட்டனர் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் போட்டி முழக்கங்களை எழுப்பி திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான ஜெயக்குமார், கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். ஆனால் இதனை வைத்தியலிங்கம் இன்று மறுத்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் தர்ம யுத்தங்கள்
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று காலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என திடீர் போஸ்டர்கள் முளைத்தன. இதனால் அதிமுகவில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஒற்றை தலைமை பதவியை கைப்பற்ற இருதரப்பும் தங்களது ஆதரவாளர்களை திரட்டி வரும் நிலையில் அதிமுகவில் இதுவரை நடந்த அதிகாரத்தைப் கைப்பற்றுவதற்கான தர்ம யுத்தங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
முதல்வர் எம்.ஜி.ஆர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், புதியக் கட்சி தொடங்க விரும்பினார். அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், அதிமுக என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன் என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் பதவியும் அளித்தார். இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முதல் அதிகார போட்டி
எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் எம்ஜிஆர். 13 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக முதல் அதிகாரப் போட்டியைச் சந்தித்தது.
ஜெ- ஜா அணிகள்
1987ஆண்டு எம்ஜிஆர் மரணமடைந் நிலையில், அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர்.எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அஇஅதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.
கட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா
அப்போது ஜெ அணி, ஜா அணி இரண்டாக பிரிந்து தேர்தலை சந்தித்தது. அதிமுக ஆனால் சின்னமும் கட்சியும் முடக்கப்பட்டது. ஜான்கி அணி தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். இதனையடுத்து ஜெயலலிதா அதிமுகவைக் கைப்பற்றினார். அவரது தலைமையில் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால் "இரட்டை இலை" சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அதன்பிறகு 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவை தேர்தலையும் 2016 சட்டமன்ற தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
சசிகலா யுகம்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது 5 டிசம்பர் 2016 அன்று காலமானார். அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர். இதனையடுத்து தர்மயுத்தம் தொடங்கினார் ஓபிஎஸ். இது அதிமுக சந்தித்த இரண்டாவது அதிகார தர்மயுத்தம். இதனையடுத்து பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுக பிரிந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையே சசிகலா ஊழல் வழக்கில் சிறை சென்ற நிலையில் காட்சிகள் மாறியது. சசிகலாவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதன்பின்னர் சசிகலாவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க தொடங்கினார். தொடர்ந்து 4 ஆண்டுகள் ஆட்சியிலும் கட்சியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இணைந்து செயல்பட்டார். தொடர்ந்து கட்சியின் முக்கிய முகமாக வலம் வந்த அவர் 2021 சட்டமன்ற தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தும் கொள்ளும் அளவுக்கு தனது பலத்தை நிரூபித்தார்.
மீண்டும் தர்ம யுத்தம்
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத குறையாக தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் என இரு அணிகளாக தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுகவின் தலைமைப் பொறுப்பை பெறப்போவது யார் என்ற பலத்த விவாதம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கட்சியிலும் சரி நிர்வாகிகளும் சரி எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது .அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது தலைமைப் பதவியை விட்டுத் தர மாட்டார் எனவும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக அதிமுகவில் இருந்து வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன.