தமிழகத்தில் 5 ஆண்டுகளில் காங்கிரஸ் அசுர வளர்ச்சி.. 25 தொகுதிகளில் 16இல் வெற்றி முகம்.. என்ன காரணம்
சென்னை: கடந்த தேர்தலைப் போல இல்லாமல் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிட்ட 25 தொகுதிகளில் அதிகப்படியான இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடும் முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நோட்டாவுடன் நேரடி போட்டி.. தலைநகரில் தலை மூழ்கிய அமமுக - வேற லெவல் 'டிஸைன்'
தமிழகத்தில் விராலிமலை உள்ளிட்ட சில தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற பெரும்பாலான தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை 6 அல்லது 7 சுற்றுகள் வரை முடிந்துள்ளது.
திமுக கூட்டணி முன்னிலை
இதில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும் அதிகப்படியான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. திமுக மட்டும் 113 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய கூட்டணி கட்சிகளும் கணிசமான இடங்களில் முன்னிலையில் உள்ளன. மறுபுறம் அதிமுக கூட்டணி 84 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக மட்டும் 75 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் வெற்றி விகிதம்
இதில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி விகிதம்தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தான் போட்டியிட்ட 25 தொகுதிகளில் 16 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மேலும், கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எப்படியும் காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 15 இடங்களில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 தேர்தல்
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிட்டது. அதில் வெறும் 8 இடங்களில் மட்டுமே காங்கிரஸால் வெல்ல முடிந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சயின் வெற்றி விகிதம் 20% குறைவாகவே இருந்தது. திமுக மட்டும் அப்போது 89 இடங்களில் வென்றிருந்தது. 2016இல் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கியது முக்கிய காரணம் என பலரும் விமர்சித்தனர்.
கூட்டணி கட்சிகளிடம் கெடுபிடி
இதன் காரணமாக இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதில் திமுக கெடுபிடியுடனே நடந்து கொண்டது. காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் நீண்ட கால இழுபறி நிலவியது. மிகக் குறைவான இடங்களை மட்டுமே திமுக ஒதுக்க முன்வருவதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூட கண்ணீர் வடித்த நிகழ்வுகளை எல்லாம் நாம் மறந்துவிட முடியாது.
வெற்றி விகிதம் உயர்வு
இருப்பினும், தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. போட்டியிட்ட 25 தொகுதிகளில் காங்கிரஸ் 16இல் முன்னிலை பெற்றுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சியின் விகிதம் 60% மேல் அதிகரித்துள்ளது. குறைவான இடங்களில் போட்டியிட்டாலும், அதிகளவில் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இது அக்கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய தலைவர்கள் பிரசாரம் இல்லை
அதிலும்கூட சோனியா காந்தி, பிரியங்கா காந்தி என அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் தமிழ்நாட்டில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. ராகுல் காந்தி மட்டுமே அதுவும் தொடக்கத்தில் மட்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்தார். இதையெல்லாம் தாண்டி காங்கிரஸின் வெற்றி விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி
அதிக எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடுவதை காட்டிலும் எந்தெந்த இடங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை கண்டறிந்து போட்டியிடுவது எவ்வளவு முக்கியம் என்பது இத்தேர்தலில் தெளிவாகியுள்ளது. காங்கிரஸ் தவிர்த்து விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கணிசமான இடங்களில் முன்னிலையில் உள்ளன.