அதிமுக அவுட்டாம்..! காங்கிரஸ் தான் இப்போ 2வது பெரிய கட்சி.. சொல்வது திருநாவுக்கரசர்!
சென்னை : அதிமுகவில் தற்போது 3, 4 கோஷ்டிகள் இருப்பதை வைத்துப் பார்த்தால் காங்கிரஸ் தான் இரண்டாவது பெரிய கட்சி என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, கட்சிகளுக்கு இடையே அதிக சீட் பெறுவது தொடர்பான போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சியின் பலத்தைக் காட்டி அதிக சீட் பெற முயற்சிகள் நடந்து வருகின்றன.
பாஜகவினர், தொடர்ச்சியாக போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து, அக்கட்சி தமிழகத்தில் வளர்ந்து வருவதாகப் பேசி வருகின்றனர்.
எதிர்க்கட்சி யார் என்பது தொடர்பாக, பாஜக - அதிமுக இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் தான் எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்.
ஓபிஎஸ்க்கு பச்சை கொடி? அதிமுகவில் பிரிவார்கள்.. தேர்தலில் ஒன்றாக சேருவார்கள்! செல்லூர் ராஜு அதிரடி!
காங்கிரஸ் மோதல்
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை மாற்றியது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் கடந்த 15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்சியினர் இடையே அடிதடி ஏற்பட்டு சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூபி மனோகரனை இடைநீக்கம் செய்ய 62 மாவட்ட தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
டெல்லி சென்ற தலைவர்கள்
இந்நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் இரு பிரிவினராகச் சென்று இந்திரா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது புகார் கொடுக்கச் சென்றதாகக் கூறப்பட்டது.
திருநாவுக்கரசர் பேட்டி
இந்நிலையில், நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பான கேள்விக்கும், காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் டெல்லி சென்றுள்ளது குறித்தும் பதில் அளித்தார்.
பேசி தீர்த்திருக்க வேண்டும்
திருநாவுக்கரசர் பேசுகையில், "கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராகி நான்கரை வருடங்கள் ஆகிவிட்டது. சமீபத்தில் வட்டார அளவில் தேர்தல் நடந்ததில் ஆங்காங்கு ஏதேனும் பிரச்சனை வந்திருக்கலாம். அதில் சில மாற்றுக்கருத்துக்கள் இருந்திருக்கலாம். இவையெல்லாம் பேசித் தீர்த்திருக்க வேண்டிய விஷயங்கள். அது சம்பந்தமாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பதும் சகஜம். அவை அனைத்தும் பேசித் தீர்க்கப்படும்.
கடல் இருந்தால் அலை
கட்சி என்று இருந்தால் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். இவை பேசி சரி செய்ய வேண்டிய விஷயம். கடல் என்று இருந்தால் அலைகள் இருப்பது போல கட்சி என்று இருந்தால் பிரச்சனைகள் இருப்பது இயல்பு. இதுபோன்ற மோதல்கள் தமிழக காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் பாதிக்காது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தலைமையை சந்திப்பது வழக்கமான ஒன்று.
டெல்லி
புதிய தலைமையோ பழைய தலைமையோ அதை மத்திய காங்கிரஸ் முடிவெடுக்கும். அது யாருடைய தனிப்பட்ட முடிவு அல்ல. காங்கிரஸ் கட்சியில் யாரும் நிரந்தர தலைவராக இருந்ததில்லை. மாற்றங்கள் எதார்த்தமாக நடக்கக்கூடிய ஒன்று. அது குறித்து தேசிய காங்கிரஸ் தலைமை முடிவு செய்து அறிவிக்கும். தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர்பான முடிவுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய வேண்டிய விஷயம்.
2வது பெரிய கட்சி
திமுக - காங்கிரஸ் கூட்டணி தெளிவாக உள்ளது. எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும். தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்குப் பிறகு காங்கிரஸ் தான் பெரிய கட்சி. அதிமுகவில் தற்போது 3, 4 கோஷ்டி உள்ளது. அதை வைத்து பார்த்தால் காங்கிரஸ் தான் 2வது பெரிய கட்சியாக உள்ளது. தமிழகத்தில் பாஜக வளர்ந்து ஆட்சியை எல்லாம் பிடிக்க முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.