கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தையால்... உண்ணாவிரதத்தை கைவிட்டார் காங்கிரஸ் எம்.பி. விஷ்ணுபிரசாத்!
சென்னை: கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியதால் சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் நடத்தி வந்த ஆரணி எம்.பி. விஷ்ணுபிரசாத் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
காங்கிரஸ் கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு இந்த தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்கப்பட உள்ளதாக விஷ்ணுபிரசாத் குற்றம்சாட்டினார்.
விஷ்ணு பிரசாத்தின் கருத்துக்கள் கட்சியின் தலைமையிடம் தெரிவிக்கப்படும்'' என்று கே.எஸ்.அழகிரி
கூறினார்

காங்கிரஸ் பட்டபாடு
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் 25 தொகுதிகளை பெற்றது. ஆனால் இந்த 25 தொகுதிகளையும் வாங்குவதற்கு அவர்கள் பட்ட பாட்டை வெறும் வார்த்தையால் சொல்லி விட முடியாது. பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கண்ணீர் ஆகியவற்றை தாண்டியே இந்த தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது.

விஷ்ணு பிரசாத் உண்ணாவிரதம்
தொகுதிகள் பெற்ற பிறகும் காங்கிரசின் தலைவலி முடியவில்லை. இந்த 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் இன்னும் அறிவிக்கவில்லை. வேட்பாளர் இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத் இன்று தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சி அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

கட்சியை காட்டி கொடுத்தவர்களுக்கு சீட்?
காங்கிரஸ் கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு இந்த தேர்தலில் காங்கிரஸ் சீட் வழங்கப்பட உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களது உறவினர்களுக்குத் தொகுதியைக் கேட்டுப் பெறுகிறார்கள். தமாகாவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தவர்களுக்கு தொகுதி வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ராகுல் காந்தியின் ரத்த வியர்வையால் வளர்ந்த கட்சி. கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கு சீட் வழங்குவதில் என்ன நியாயம்? உண்மையாக உழைப்பவர்களுக்குத் தொகுதிகளை வழங்க வேண்டும்' என்று கொதிப்புடன் தெரிவித்தார்.

கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை
இதனால் சத்தியமூர்த்தி பவனே பரபரப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி போராட்டத்தில் ஈடுபட்ட விஷ்ணு பிரசாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரசில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கே சீட் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, '' விஷ்ணு பிரசாத்தின் கருத்துக்கள் கட்சியின் தலைமையிடம் தெரிவிக்கப்படும்'' என்று கூறினார். கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியதால் விஷ்ணுபிரசாத் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications