வருங்காலத்தில் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்- கே எஸ் அழகிரி
சென்னை: வருங்காலத்தில் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர் இன்று நடந்த இந்த பேச்சுவார்த்தையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்த கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதாவது: மதச்சார்பின்மை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்படுகிறோம். சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு.
திமுகவுடனான தொகுதி உடன்பாடு மகிழ்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் தொகுதியும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியலில் ஏற்ற இறக்கங்கள் என்பது இயல்பு. இந்தியாவில் மிகப் பெரிய நோயாக பாஜக வளர்ந்து வருகிறது.
சக்சஸ்.. முட்டி மோதி கவுரவத்தை காக்க.. கே எஸ் அழகிரியின் செம மாஸ்டர் மூவ்! சோனியா ஹேப்பி!
தமிழகத்தில் பாஜக கால்பதிக்கக் கூடாது. அதிமுக கூட்டணி வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணி. பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே. வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம் என்றார் கே எஸ் அழகிரி.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திமுகவுடனான தொகுதி பங்கீடு உடன்பாடு முழு திருப்தி அளிக்கிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெறும் என காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.