கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக்கடன் தள்ளுபடி? அரசு குட் நியூஸ்? நகைக் கடனை வாங்க தேவையான ஆவணங்கள்?
சென்னை: தேர்தல் விரைவில் வரப்போகிறது.. நகைக்கடன் தள்ளுபடி ஆகப்போகுது என்ற பெருத்த நம்பிக்கையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.. இது சம்பந்தமாக மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? இந்த கடனை பெறுவதற்கான செயல்முறைகள், நிபந்தனைகள் என்னென்ன? ஆவணங்கள் என்னென்ன? என்பதை பற்றியும் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்வது நல்லது.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயம் மற்றும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட செலவுகளுக்காக விவசாயிகள் வங்கிகளில் நகையை வைத்து கடன் பெறுவது வழக்கம்.

கூட்டுறவு வங்கிகள்
அதிலும் அதிகமாக தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, நிலவள வங்கி போன்றவற்றில் வாங்குவதையே விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள்..
இதற்கு காரணம், தங்க நகைக்கடனை வங்கியில் பெறுவதற்கு கெடுபிடி நிபந்தனை, விதிமுறைகள் கிடையாது. வட்டி விகிதம் குறைவாகும்.. வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் மாறினாலும், மொத்தத்தில் வட்டி குறைவாக இருக்கும்.
அதனால்தான் மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்களில் அடமானம் பெயரில் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
நகைக்கடன் தள்ளுபடி
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு தேர்தலின் போதும், நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு வாக்குறுதியாக அளிக்கப்பட்டு வருவது, அவர்களுக்கு பேருதவியாக அமைந்து வருகிறது.. அந்தவகையில் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது.. இந்த நகை கடன் மாநில அரசுகள் தள்ளுபடி செய்துவிடும் என்ற அபரிமிதமான நம்பிக்கையிலும் அடகு வைக்கிறார்கள்..
நிச்சயம் இந்த முறை தேர்தலில் தள்ளுபடி அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே உள்ளது. இதனால் வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார்களாம்..
அரசு குட் நியூஸ்?
குறிப்பாக நகைக்கடன் தள்ளுபடியில் திமுக ஏற்கனவே வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதால், மீண்டும் வாக்குறுதியை தரும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர். அதுமட்டுமல்ல, இப்போது நிலுவையிலுள்ள நகைக் கடன் எவ்வளவு உள்ளது என்பது குறித்த லிஸ்ட்டை தயார் செய்யும்படி அதிகாரிகளுக்கும் அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCB) மற்றும் முதன்மை வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS) உள்ளிட்டவைகளில் வழங்கப்படும் கூட்டுறவு நகைக் கடனை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்? நிபந்தனைகள்? நகையின் தரம் போன்றவற்றையும் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நகைக் கடன் பெற ஆவணங்கள்
குறிப்பாக தமிழ்நாட்டில் வசிப்பவர்களே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.. நகையின் தூய்மையும் முக்கியம்... பொதுவாக 18 முதல் 22 காரட் தங்கநகைகளையே பெரும்பாலான வங்கிகள் ஏற்கின்றன... சில சமயம் நாணயங்கள் அல்லது தங்கப் பட்டைகளை ஏற்காமல் இருக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டுமானால், ஆதார், வாக்காளர் அட்டை, PAN, பாஸ்போர்ட் போன்ற அடையாள ஆவணம் ஒன்று கட்டாயம் தேவைப்படும்.. அத்துடன் ரேஷன் கார்டு, மின்சார ரசீது அல்லது வங்கி ஸ்டேட்மெண்ட் போன்ற முகவரி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் தேவைப்படும்.
குறைந்த வட்டி - நிறைந்த பலன்
நகை மதிப்பீடு வங்கி அங்கீகரித்த மதிப்பீட்டாளரால் செய்யப்படும் என்பதால், அதை தனியாக எடுக்க வேண்டியதில்லை. விவசாய நகை கடன் என்றால் நில உரிமை, பயிர் சான்று போன்ற கூடுதல் ஆவணங்களை PACCS கேட்டால், அதையும் காட்ட வேண்டியிருக்கும்.. அனைத்து ஆவணங்களின் நகல்களையும், கையெழுத்து போட்டு ரெடியாக எடுத்து கொண்டு போவது ரொம்ப நல்லது.
விண்ணப்பப் படிவம் நிரப்பும்போது, நகையின் எடையும் தூய்மையும் பார்த்து கடன் தொகை கணக்கிடப்படும்... சில இடங்களில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படலாம். உரிய காலத்தில் பணம் செலுத்தாவிட்டால், அரசு விதிகளின்படி வங்கி நோட்டீஸ் அனுப்பி ஏலம் விடும் நடைமுறைக்கு சென்றுவிடும்.. எனினும் விதிமுறைகளை சரியாக பின்பற்றினால், குறைந்த வட்டியில் நிம்மதியாக கடனை பெறலாம்.












Click it and Unblock the Notifications