பிரிட்டனில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா உறுதி.. ஊரடங்கு குறித்து விஜயபாஸ்கர் விளக்கம்
சென்னை: பிரிட்டனில் இருந்து வந்த 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று, சாதாரண கொரோனாவை விட அதிக வேகத்தில் மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து உடனான சர்வதேச விமான போக்குவரத்தை இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.
இதன் காரணமாக இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்து அவர்களை பரிசோதித்து தனிமைப்படுத்தும் பணியை தமிழக சுகாதாரத்துறை வேகப்படுத்தி உள்ளது.
2300 பேர்
இது தொடர்பாக நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில். கடந்த நவம்பர் 21 முதல் டிசம்பர் 25 வரை சுமார் 2300 பேர் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளதாக சுகாதாரத்துறை மதிப்பிட்டுள்ளது. இதேபோல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியான பின் டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை 49 பயணிகள் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளனர்.
தேடும் பணி தீவிரம்
இங்கிலாந்தில் இருந்து வந்த 2300 பேரில் இதுவரை 1437 பேரை தேடி கண்டுபிடித்து சோதனை செய்துள்ளது. அவர்களில் 12 பேருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வந்த 49 பேரில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2300 பேரில் 1437 பேருக்கு சோதனை நடந்துவிட்ட நிலையில் அவர்களில் 1224 பேருக்கு கொரோனா நெகட்டிவ் என்பது உறுதியாகி உள்ளது. 201 பேரின் முடிவுக்காக காத்திருக்கிறோம். மற்ற பயணிகளை கண்காணித்து பரிசோதிக்கும் பணி நடந்து வருகிறது என்று கூறப்பட்டது.
தஞ்சையில் 3 பேர்
அத்துடன் தமிழகத்திற்கு இங்கிலாந்தில் இருந்து வந்து கொரோனா பாதிப்புடன் உள்ள 13 பேரின் விவரத்தையும் சுகாதாரத்துறை வெளியிட்டது. இதன்படி சென்னையில் 5 பேர், தஞ்சாவூரில் 3 பேர், நீலகிரியில் 2 பேர், தேனி, மதுரை, செங்கல்பட்டில் தலா ஒருவரும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
15 பேருக்கு கொரோனா
மேலும் இங்கிலாந்தில் இருந்து வந்து கொரோனா பாதித்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தும் வார்டில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியிருந்தது. இந்நிலையில இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், தொடர்பில்இருந்தவர்கள் என 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் விளக்கம்
7000 என்கிற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1000 என்ற அளவில் குறைந்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இல்லை" இ்வ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் .கூறினர். இதனிடையே கொரோனா பாதித்த 13 பேரின் மாதிரிகளில் 4 பேரின் மாதிரிகள் வித்தியாசமாக இருப்பதாக ஆய்வு முடிவகள் தெரிவிக்கின்றன.