அதிகரிக்கும் கொரோனா - பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையரையின்றி தள்ளி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். விடுமுறை நாட்களை மாணவர்கள் படிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டது என்று கடந்த நவம்பர் மாத இறுதியில் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் ஓமிக்ரான் பரவத் தொடங்கியது. இதனையடுத்து டிசம்பர் மாதம் நடைபெற இருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜனவரி முதல் கொரோனா மீண்டும் வீரியமாக பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 21ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தையும் சென்னை பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டாலும் கல்லூரிகளில் செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெறும் என்றும் கூறினார். கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விடுமுறை நாட்களை மாணவர்கள் படிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.