கொரோனா காலத்தில் விடுமுறை போல ஊர்சுற்றுகின்றனர்...இனி தளர்வுகளற்ற ஊரடங்கு - ஸ்டாலின்
விடுமுறை போல அனைவரும் ஊர் சுற்றுவதால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தீவிரமாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. முழு ஊரடங்கை சிலர் விடுமுறை காலமாக எண்ணி செயல்படுகின்றனர். இது கொரோனா காலம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தளர்வுகளற்ற ஊரடங்கு இரு வாரங்களுக்கு கட்டாயம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டும் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக இன்று மருத்துவ வல்லுநர்களுடன் காலையில் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பிரதீப் கவுர், குகநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 19 மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைக்கு பின்னர் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

லாக்டவுன் நீடிப்பு
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் நிபுணர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீடிக்குமாறு மருத்துவ நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் நிபுணர் குழு பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மு.க ஸ்டாலின் பேச்சு
அதன் பின்னர் 11.30 மணிக்கு சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. முழு ஊரடங்கை சிலர் விடுமுறை காலமாக எண்ணி செயல்படுகின்றனர். இது கொரோனா காலம் என்பதை அவர்கள் உணரவில்லை. அவ்வாறு வெளியில் சுற்றுபவர்களிடம் காவல்துறை மூலம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்.

முழு கட்டுப்பாடு அமல்
தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை பலர் மீறி வருகின்றனர். தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். எனவே தளர்வுகளற்ற ஊரடங்கு இரு வாரங்களுக்கு கட்டாயம் விதிக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். இம்முறை காவல்துறையினர் தீவிரமாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை கூறிய முன்னாள் அமைச்சர்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பால், காய்கறி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி தரவேண்டும். நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்க வேண்டும் . சி.டி.ஸ்கேன் அதிகம் செய்ய வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications