கொரோனா மூன்றாவது அலை...பள்ளிகள் திறப்பு குறித்து உயர் நீதிமன்றம் புதிய யோசனை
கல்வி எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், கல்வி எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சில நாட்கள் மட்டுமே செயல்பட்டன. கொரோனா இரண்டாவது அலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படவே மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. ஆல்பாஸ் போடப்பட்டது. கல்லூரி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதால், உயர் கல்வி பெறும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி, வகுப்புகளை மீண்டும் துவங்க உத்தரவிடக் கோரி, நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாட்டில், 23.8 சதவிகித வீடுகளில் மட்டுமே இணைய தள இணைப்புகள் உள்ளதாகவும், 10.7 சதவீத வீடுகளில் மட்டும் கணிப்பொறி வசதிகள் உள்ளதாகவும், 130 கோடி மக்கள்தொகையில், 30 கோடி மக்களிடம் மட்டுமே ஸ்மார்ட்போன்கள் உள்ளதாகவும் 2017ல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும், இதனால் அனைத்து மாணவர்களும் ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளும் வசதியை பெற்றிருக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி, பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டிடக் கலை படிப்புகளை ஆன் லைன் மூலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், தொடர் ஊரடங்கு காரணமாக, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணாக ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பள்ளி, கல்லூரிகளும், நீதிமன்றமும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுவதால் பல சாதகங்களும், பாதகங்களும் உள்ளன எனத் தெரிவித்தனர்.
உடல் நலம் சரியில்லாத, மாற்றுத் திறனாளி மாணவர்கள், ஆன் லைன் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்பு வழங்க வேண்டும் எனவும், எந்தெந்த நாளில் நேரடி வகுப்பு நடத்தப்படும், எந்தெந்த நாளில் ஆன் லைன் வகுப்பு நடத்தப்படும் என்பதை அறிவித்து, அதற்கான விதிகளை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
நேரடி வகுப்புக்கு மாற்றாக கூடுதலாக ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் எனவும், கலப்பு முறையில் நேரடி மற்றும் ஆன் லைன் வகுப்புகளை நடத்தலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்பில்லை என அறிக்கைகள் வெளியாவதால், இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கை தெரிவித்த நீதிபதிகள், கல்வி எளிதில் அணுகக் கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன் லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications