"தளபதி" நான் ஒரு அதிமுககாரன்.. சொல்லவே வெட்கமாயிருக்கு.. கிழிச்சு போட்டுட்டேன்.. அதிர வைத்த தொண்டர்
முக ஸ்டாலினை பாராட்டி அதிமுக தொண்டர் கடிதம் எழுதி உள்ளார்
சென்னை: "தளபதி.. நான் ஒரு அதிமுககாரன்.. ஆனால் தற்போது அதை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கு.. இந்த அரசு மக்கள் கஷ்டப்படும்போது கை கொடுக்க முடியாத அரசாக உள்ளது... வெறும் ஆயிரம் ரூபாய், ரேஷன் அரிசி வைத்து கொண்டு என்ன செய்ய முடியும்? இந்த கட்சியில் இருந்ததற்காக வெட்கப்பட்டு, உறுப்பினர் அட்டையை கிழித்து விட்டேன். இனி என் வழி தளபதி வழிதான்.. உங்களின் வா ஒன்றிணைவோம் திட்டத்தில் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன்" என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு ஆச்சரிய கடிதம் வந்துள்ளது.
தமிழகத்தின் மிக இக்கட்டான நேரத்தில், நெருக்கடியான சூழலில், மிக மிக ஒரு செயல் திட்டத்தை "ஒன்றிணைவாம் வா" என்ற பெயரில் திமுக தலைவர் அறிவித்திருந்தார்... வெகு வேகமாக இந்த திட்டம் மக்களை சென்றடைகிறது.
ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்ய ஆரம்பித்துவிட்ட நிலையில், ஒன்றிணைவோம் வா மேலும் பக்க பலமாகி வருகிறது.
தொண்டர்கள்
திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்து தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரணப்பணியில் ஈடுபடுவது என்று முடிவெடுத்து, இதற்காகவே ஒரு ஹெல்ப் லைன் நம்பரும் தரப்பட்டு, தரப்பட்டுள்ளது. திமுகவின் திட்டம் தானே இது என்று மக்கள் இதனை ஒரேடியாக புறக்கணிக்கவில்லை.. அனைத்து தரப்பில் இருந்தும் போன்கள் வருவதாகவும், மக்களிடம் நேரடியாக இந்த பலன்கள் சென்றடைவதாகவும் கூறப்படுகிறது.
முக ஸ்டாலின்
ஆரம்பித்த ஓரிரு நாட்களிலேயே அளவுக்கு அதிகமான வரவேற்பை இந்த திட்டம் பெற்று வருகிறது.. இதற்கு முக்கியமான காரணம் ஸ்டாலின்தான்.. நேரடியாகவே இந்த திட்டம் குறித்த செயல்பாடுகளை கண்காணிக்கிறார்.. நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசி கலந்தாலோசிக்கிறார்.. இதனால் மக்களின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் தீர்வும், நன்மையும் கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. முதல் 5 நாட்களில் சுமார் 2 லட்சம் பேர் உதவி கோரப்பட்டதாக கூறப்படுகிறது.
தளபதி அவர்களுக்கு...
இந்நிலையில், இந்த திட்டத்தில் அதிமுகவை சேர்ந்த நபர் ஒருவர் பலனடைந்துள்ளார்.. அதற்காக நன்றி சொல்லி திமுக தலைவருக்கு ஒரு லட்டரையும் எழுதியுள்ளார்.. அந்த லட்டரில் எழுதப்பட்டிருந்தது இதுதான்: "உயர்திரு தளபதி முக ஸ்டாலின் அவர்களுக்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து கு.தங்கராஜ் ஆகிய நான் மரியாதையுடனும், வணக்கத்துடனும் எழுதிய வாழ்த்து மடல். தாங்கள் செய்த வா ஒன்றிணைவோம் என்ற திட்டத்தில் பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவன். நான் ஒரு அதிமுக உறப்பினர். ஆனால் தற்போது அதை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த அரசு மக்கள் கஷ்டப்படும்போது கை கொடுக்க முடியாத அரசாக உள்ளது.
கிழித்து விட்டேன்
வெறும் ஆயிரம் ரூபாய், ரேஷன் அழுத்து போன அரிசி, இதை வைத்து கொண்டு என்ன செய்ய முடியும்? நீங்கள் கூறிய 5000 திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. இந்த கட்சியில் இருந்ததற்காக வெட்கப்பட்டு, உறுப்பினர் அட்டையை கிழித்து விட்டேன். இனி என் வழி தளபதி வழியாக. ஈரோடு மாவட்ட செயலாளர் அவர்களின் கீழ் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு தங்களின் அனுமதியும் ஆசியும் கிடைக்க வேண்டுகிறேன்" என்று எழுதியுள்ளார்.
நண்பர்கள்
இந்த கடிதத்தை ட்வீட்டில் டேக் செய்துள்ள முக ஸ்டாலின் ஒரு பதிவையும் போட்டுள்ளார். அதில், "ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல இலட்சம் பேருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். உதவி பெற்ற நண்பர்களில் ஒருவரான ஈரோட்டை சேர்ந்த கு.தங்கராஜ் - அதிமுக உறுப்பினரான அவர் அனுப்பியுள்ள கடிதம் நெகிழ செய்கிறது. ஒன்றிணைவோம் வா என்ற திட்டமே சாதி, மதம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உதவிகள் செய்வதுதான். திமுகவின் இத்தொண்டு என்றும் தொடரும்! - முக.ஸ்டாலின்" என்று பதிவிட்டுள்ளார்.
கமெண்ட்கள்
ஸ்டாலினின் இந்த ட்வீட பெரும் வைரலாகி வருகிறது... "தன்னுடைய சிறப்பான மக்கள் பணியால் மாற்றுக் கட்சியினர் மனதையும் வென்ற மக்களின் முதல்வா... ஒன்றிணைவோம்_வா மாபெரும் வெற்றியினால் மக்கள் மனதில் திமுக-ஸ்டாலின் இமேஜ் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளதை, இதைப்பற்றியே புலம்பிக் கொண்டிருக்கும் வயிற்றெரிச்சல்காரர்களின் கூப்பாடுகளில் இருந்தே உணரலாம், நொந்து கிடக்கும் தமிழக மக்கள் பலரது பசி போக்கி உயிர் காக்கும் உன்னத திட்டம் இது.. அரசால் செய்ய முடியாத ஒன்றை ஒரு இயக்கம், ஒரு கட்சியால் செய்ய முடிகிறது! காரணம் ஒன்றே ஈடுபாடு, மக்களின் நலம். சிறப்பு" என்று ஏகப்பட்ட கமெண்ட்கள் விழுந்தபடியே உள்ளன.
முதல்வர் எடப்பாடியார்
தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் சில தினங்களுக்கு முன்பு இப்படித்தான் ஒருவர் ட்வீட் போட்டிருந்தார்.."ஐயா நான் எதிர்க்கட்சியை சார்ந்தவன்... உங்களுக்கு நாங்க இருக்கோம்.. தலை வணங்குகிறேன்... கொரனா அழிக்கும் தங்களின் முயற்சிக்கு பின்னால் உறுதுணைய இருப்போம்" என்று பாராட்டு தெரிவித்திருந்தார். இப்போது அதிமுகவை சேர்ந்த ஒருவர் திமுகவை பாராட்டி உள்ளார்.. கொரோனா விஷயத்தில், கட்சி பாகுபாடில்லாமல் அதிமுக, திமுக இரு தரப்புமே மக்கள் நலனில் இறங்கி உள்ளது என்பதைதான் இது பிரதிபலிக்கிறது.. அதை தாம் நாம் உற்று நோக்க வேண்டி உள்ளது.. மாற்று கட்சிகள் என்ற சுவர்களையும் தாண்டி மனிதம் தழைத்து வருவதைதான் இரு திராவிட கட்சிகளும் வெளிப்படுத்தி வருகின்றன!