முதல் சோதனையில் நெகட்டிவ்.. ஆனால் 28 நாட்களில் பாசிட்டிவ்.. குழப்பும் கொரோனா.. பீலா ராஜேஷ் விளக்கம்!
முதலில் சோதனை செய்தால் கொரோனா இல்லை என முடிவு வருகிறது, ஆனால் 28 நாட்களில் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தால் பாசிட்டிவாக மாறுகிறது என்று பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: முதலில் சோதனை செய்தால் கொரோனா இல்லை என முடிவு வருகிறது, ஆனால் 28 நாட்களில் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தால் பாசிட்டிவாக மாறுகிறது என்று தமிழகம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் மாறியுள்ளது. நேற்று கொரோனா காரணமாக ஒருவர் தமிழகத்தில் பலியானார். ஏற்கனவே பலியான ராமநாதபுரம் முதியவருக்கு நேற்றுதான் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா காரணமாக தமிழகத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 558 பேர் கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 8 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் வீச்சு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.
தொடங்கியது.. டிரம்ப் எச்சரித்த 'மிக மோசமான வாரம்'.. கொரோனாவால் நிலைகுலைந்த அமெரிக்கா.. 9610 பேர் பலி
பீலா ராஜேஷ் என்ன சொன்னார்
பீலா ராஜேஷ் தனது பேட்டியில், தமிழகத்தில் கண்டெயின்மெண்ட் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கண்டெயின்மெண்ட் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 860 வீடுகள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. மொத்தம் 38 லட்சம் பேர் கண்காணிக்கப்பட்டு உள்ளனர்.
பேட்டி அளித்தார்
சென்னையில் மட்டும் இந்த பணிகளை செய்வதற்கு 15 ஆயிரம் பேர் உள்ளனர். மொத்தமாக டெல்லியில் மத மாநாட்டில் கலந்து கொண்ட 1246 பேர் எங்களிடம் வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் கொரோனா சோதனை எடுக்கப்பட்டுள்ளது. சிலரின் முடிவிற்காக காத்து இருக்கிறோம். இவர்களின் எண்ணிக்கையில் சில குழப்பம் உள்ளது.
மூச்சு தொற்று
டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து சரியாக எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்று உறுதியாக தெரியவில்லை. இதற்கான விசாரணை நடக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் இது தொடர்பாக முழுமையான எண்களை வெளியிடுவோம். நாம் இன்னும் ஸ்டேஜ் 2ல்தான் இருக்கிறோம். ஸ்டேஜ் 3 செல்லவில்லை. முக்கியமாக SARI என்னும் தீவிர மூச்சு தொற்று (severe acute respiratory infections) இருக்கும் நபர்களுக்கு முதலில் கொரோனா சோதனை செய்கிறோம்.
ராமநாதபுரம் நபர்
கடந்த வாரம் பலியான ராமநாதபுரம் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு முதலில் கொரோனா அறிகுறியே இல்லை. ராமநாதபுரம் நபர் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனை கொண்டு வரப்பட்டார். அவர் மருத்துவமனை வந்து 30 நிமிடத்தில் பலியாகிவிட்டார். மிக மோசமான உடல்நிலையுடன் அவர்கொண்டு வரப்பட்டார். அவரின் உடல் முறையாக அடக்கம் செய்யப்பட்டது. இதற்கான அறிவுரை வழங்கப்பட்டது.
கொரோனாவை கணிக்க முடியாது
கொரோனாவை கணிக்க முடியாது. முதலில் அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள். நன்றாக இருக்கிறார்கள். பேசிக்கொண்டே இருக்கும் போதே ஏதாவது நடக்கிறது. இரண்டு மணி நேரத்தில் எல்லாம் மாறுகிறது. வெறும் 2 மணி நேரத்தில் மூச்சு திணறல் வந்து பலியாகிறார்கள். முதலில் பரிசோதனை செய்யும்போது கொரோனா இல்லை என முடிவு வருகிறது, ஆனால் 28 நாட்களில் மீண்டும் பரிசோதனை செய்து பார்த்தால் பாசிட்டிவாக மாறுகிறது.
28 நாட்கள் காலம்
கொரோனா பரவ 28 நாட்கள் வரை காலம் இருக்கிறது. இது அதன் கருவுறும் காலம் ஆகும். 28 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் ஒரு நபருக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வர வாய்ப்புள்ளது. ஒருமுறை நெகட்டிவ் என்று வந்தால் அவர்களை விட்டுவிட முடியாது. 28 நாட்களுக்குள் மீண்டும் கொரோனா வர வாய்ப்புள்ளது. அவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும், இதுதான் சிரமம் என்று பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.