டிங்கரிங் முடிந்தது.. தீவிரம் எடுக்கும் சுத்தம் செய்யும் பணி.. தமிழ்நாட்டில் இயங்க தயாராகும் பஸ்கள்
சென்னை: தமிழகத்தில் வரும் திங்களில் இருந்து பேருந்துகளை இயக்குவதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் எப்போது பேருந்துகள் இயக்கப்படும், என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி சென்னையில் வரும் 18ம் தேதி பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது.
தமிழகம் முழுக்க சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படும் என்கிறார்கள். மேலும் பேருந்தில் 25 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். 20 பேர் அமர்ந்து இருக்க முடியும். 5 பேர் நிற்க முடியும். இரட்டை சீட்களில் ஒருவர் மட்டுமே அமர முடியும் என்கிறார்கள்

சுத்தம் செய்கிறார்கள்
இந்த நிலையில் தமிழகம் முழுக்க தற்போது பேருந்துகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. வெளி மாநிலங்களுக்கு சென்றுவிட்டு திரும்பிய பேருந்துகளை முதற்கட்டமாக சுத்தம் செய்து வருகிறார்கள். அதேபோல் மருத்துவ பணிகளுக்கு சென்று திரும்பிய பேருந்துகளை சுத்தம் செய்து வருகிறது.தமிழகம் முழுக்க இருக்கும் பேருந்து பணி மனைகள் இதற்காக மும்முரமாக இயங்கி வருகிறது. பணியாளர்கள் பலர் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.

கிருமிநாசினி தெளிப்பு
அதேபோல் பேருந்துகள் உட்பகுதியில் முழுக்க கிருமிநாசினிகளை தெளித்து வருகிறது. சூடான திரவத்தில் சோப்பு நுரை போட்டு பேருந்தை கழுவுகிறார்கள். அதன்பின் அதன் மீது கிருமி நாசினிகளை தெளிக்கிறார்கள். மருத்துவர்களின் மேற்பார்வையோடு இந்த பணிகள் நடந்து வருகிறது. பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி இது போன்ற பணிகளை செய்து வருகிறார்கள்.

உட்பக்கம் என்ன
அதேபோல் பேருந்தின் உட்பக்கம் சீட்களை புதிதாக மாற்றும் பணியும் நடந்து வருகிறது. புதிதாக வண்ணம் அடிக்கும் பணிகள் நடக்கிறது. மேலும் பேருந்துக்கு பட்டி / டிங்கரிங் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் பழுதான பேருந்துகளுக்கு புதிய பாகங்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. பேருந்துகளை முழு வீச்சில் செயல்படுத்த அனைத்து விதமான பணிகளும் தயாராகி வருகிறது.
Recommended Video

உள் சுற்றறிக்கை
ஏற்கனவே இதற்காக உள் சுற்றறிக்கை அனைத்து மாவட்ட பேருந்து கழகங்களுக்கு சென்றுள்ளது. போக்குவரத்து விரைவில் தொடங்கும். ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை சென்றுள்ளது. இதனால் ஊழியர்கள் தற்போது பணிக்கு சேர தயாராக இருக்கிறார்கள். இதனால் பெரும்பாலும் தமிழகத்தில் திங்கள் கிழமையில் இருந்து பாதி பேருந்துகள் இயங்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications