கொரோனா வைரஸ்: 14 நாட்களை விட்டுவிட்டால்.. காளிதாஸ் சொல்வதை கேளுங்க.. எல்லாம் புரியும்!
14 நாட்கள் தனிமைப்படுத்துவது ஏன் என்று வாசகர் விளக்கம் தந்துள்ளார்
சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதால், 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் எதற்காக இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்துகிறார்கள், அதன் நன்மை, பலன்கள் என்ன என்று நம் வாசகர் காளிதாஸ் என்பவர் ஓமன் நாட்டில் இருந்து ஒரு விளக்கம் தந்துள்ளார்.
அந்த விளக்கம்தான் இது: "வணக்கம். என்பெயர் காளிதாஸ். சமீபகாலமாக கொரோனா வைரஸ் மூலமாக வரும் COVID-19 நோய் பற்றிய நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நாம் சந்திக்கும் மிகப்பெரிய பேரழிவு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல்.

இதுதொடர்பாக இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்திலிருந்து நிறைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு வெளியே இருப்பதாலும், பலநாட்டை சேர்ந்தவர்களோடு பேசும் வாய்ப்பு இருப்பதாலும் எனக்கு தெரிந்த ஒரு மிக முக்கியமான விஷயத்தை பற்றி ஓமன் நாட்டில் இருந்து உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான முதல் மற்றும் முக்கியமான நாடு சைனா. எந்த ஒரு மாற்று மருந்து (Antivirus) மற்றும் தடுப்பு ஊசி (Vaccine) இல்லாவிட்டாலும் புதியதாக பாதிக்கப்பட்ட எவரும் நேற்று முதல் இங்கு பதிவு செய்யப்படவில்லை. மிக குறுகிய காலத்தில் அவர்கள் இதை எப்படி சாதித்தார்கள் என்று நாம் அறிவோமானால் இந்த 14 நாட்கள் தனிமைபடுத்துதல் பற்றிய மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். இந்த வைரஸ் பாதித்த இரண்டு பெரிய மாகாணங்களை முழுமையாக மூடினார்கள்.

வெறும் பத்தே நாட்களில் ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் புத்தம் புதிய மருத்துவமனையை கட்டி முடித்தார்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் ,61,000 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதை சரிவர செய்யாத அமெரிக்கா இத்தாலி, பிரான்ஸ் , ஸ்பெயின் போன்ற நாடுகள் கடும் இக்கட்டான சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான மக்களை பறிகொடுத்துக் கொண்டுள்ளனர்.
இதை பற்றி முழுமையாக தெரிந்துகொண்ட, WHO என்று சொல்லப்படற உலகசுகாதார நிறுவனத்தின் ஆலோசனைப்படி உலகநாடுகள் கையில் எடுத்திருக்கும் வழிமுறைதான் எல்லைகளை மூடுதல் மற்றும் 14 நாட்கள் தனிமைபடுத்துதல். இதன் முதல்கட்டமாக, எல்லா நாடுகளும் மற்ற நாடுகளுக்கு இடையிலான விமான சேவையை ஏற்கனவே நிறுத்தி விட்டன. இதன்மூலம் ஒரு நாட்டில் இருந்து மற்றநாட்டுக்கு இந்த வைரஸ்பரவுவதை தடுக்க முடியும்.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைபடுத்துதல் மூலம் அவர்களை முழுமையாக குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், முக்கியமாக மற்றவர்களுக்கு பரவுவதும் தடுக்கப்படும். அப்படியும் வேறு யாருக்காவது புதிதாக அறிகுறிகள் தோன்றினால், அவர்களும்14 நாட்கள் தனிமைபடுத்தப்படுவார்கள். இதற்காக நாடுகள், மாநிலங்கள் மட்டும் அல்ல, சிறுநகரங்கள்கூட மூடப்படலாம். இதன் ஒரு பகுதியாகவே ரயில்வே மற்றும் பேருந்துகளின் தொடர்புகள் குறைக்கபட்டுள்ளன.

இப்படியாக எல்லா நாடுகளும் அவர்கள் மக்களுக்கு இந்த நோயை பரவாமல் தடுப்பதே இப்போதைக்கு உள்ள ஒரே வழி. இதை வெற்றிகரமாக செய்து முடிக்க இந்த நாட்டில்உள்ள ஒவ்வொரு மனிதரின் ஒத்துழைப்பும் வேண்டும். இதுபுரியாமல், சிலபேர் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். ஒவ்வொருவரும் தம்துறை சார்ந்த கருத்துக்களை சொல்வதில் தவறில்லை. ஆனால் கண்மூடிதனமாக சிலர் சொல்லும் கருத்துக்களை நம்பி அலட்சியமாகவோ அல்லது ஒன்று கூடுதலையோ செய்ய வேண்டாம். ஒவ்வொரு உயிரையும் காப்பதே மருத்துவர்களின் நோக்கமே தவிர, இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வேறு எந்த உள்நோக்கமும் இருக்க வாய்ப்பில்லை என்பதே என்நம்பிக்கை.
உலகின் மிகமுக்கியமான புனித தலங்களான மெக்கா, வாடிகன் மற்றும் திருநள்ளாறு போன்றவைகளும் தற்காலிகமாக மூடியது மக்களின் நலன்கருதியே! நான் வசிக்கும் அரபு நாடான ஓமான் உள்பட பலநாடுகளும் இதற்கு ஒத்துழைக்கின்றன. இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் ஒரு தண்டனையோ அல்லது அவமானமோ இல்லை; நம் உயிர்காக்க நமக்கு இருக்கும் ஒரு கடைசி வாய்ப்பு !!! எனவே ,சாதி , மதம் , மொழி , இனம் , கட்சி , பொருளாதாரம் போன்ற வேறுபாடுகளை களைந்து , மனிதம் காக்க ஒன்று கூடுவோம்.












Click it and Unblock the Notifications