ஜெயலலிதாவ காப்பாத்தி இருக்கலாம்.. சசிகலாவை மீண்டும் விசாரிக்கணும்! ரூட்டை மாற்றும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், அளித்த சிகிச்சை குறித்தும் அறிவிக்கப்படவில்லை உரியஅறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டசபை கூட்டத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில் சில அறிவுரைகளை ஏற்றிருந்தால் ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என குறிப்பிட்டிருக்கிறது. இதில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாலர் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம்
குறிப்பாக பல குற்றச்சாட்டுகள் சசிகலாவை குறிவைத்தே இருக்கின்றன. சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை எனவும், சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது என கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சசிகலா
மேலும், சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூக உறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை காரணமாக சசிகலாவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே அவர் தான் என்பது போல அறிக்கை இருப்பதாக ஜெ.ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

கோவை செல்வராஜ்
இந்நிலையில் உரியஅறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார். சென்னை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர்," தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். துப்பாக்கிச்சூடு பற்றி தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று பழனிசாமி பொய் கூறியுள்ளார்.

சசிகலா மீது விசாரணை
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, விஜயபாஸ்கர் மீது விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும், அளித்த சிகிச்சை குறித்தும் அறிவிக்கப்படவில்லை. உரியஅறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications