கொரோனா தடுப்பூசி இன்னும் போடலையா? இன்று மெகா தடுப்பூசி முகாமில் ஊசி போடலாம்
தமிழகம் முழுவதும் இன்று 20 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும் தடுப்பூசிகள் செலத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் இன்று 20 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஓமிக்ரான் பரவலுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 25 ஆயிரம் பேரை தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்று அரசு கூறினாலும் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியமாகவே உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
உலகம் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா.. இதுவரை 339,013,165 பேர் பாதிப்பு.. 5,582,614 பேர் பலி
தடுப்பூசி முகாம்கள்
100 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்று கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 19 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது.
50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 20 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்றைய தினம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
யார் யாருக்கு தடுப்பூசி
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு விடுமுறை
இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் தகுதியுள்ளோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும். தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.அதனால், தடுப்பூசி மையங்கள் நாளை செயல்படாது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.