சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தொடங்கியது கொரோனா பரிசோதனை.. காய்ச்சல் இருந்தால் 'அட்மிட்'
சென்னை: கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் ஆர்டி-பிசிஆர் எனப்படும் கொரோனா பரிசோதனை மீண்டும் தொடங்கியுள்ளது.
சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பரிசோதனையின் போது கொரோனா இருப்பது தெரியவந்தாலோ அல்லது காய்ச்சல் இருந்தாலோ அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா 'ஹை அலர்ட்'
உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த ஒரு மாதக்காலமாக சீனாவில் அந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. வேகமாக பரவுவது மட்டுமல்லாமல் பெரிய அளவில் உயிரிழப்புகளையும் அது ஏற்படுத்தி வருகிறது. மரபணு பரிசோதனையில் இது உருமாறிய கொரோனா என்பது தெரியந்துள்ளது. அண்டை நாடு என்பதால் இந்தியாவுக்கும் இந்த தொற்று பரவ அதிக வாய்ப்பிருப்பதால், மத்திய அரசு 'அலர்ட்' ஆகியுள்ளது.

அடுத்தடுத்த கட்டுப்பாடுகள்
இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் சீனாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, குஜராத்திலும், ஒடிசாவிலும் பரவுவது தெரியவந்தது. இதையடுத்து, பிரதமர் மோடி, சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனித்தனியாக சுகாதாரத் துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவுறுத்தல்களையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியது. அதன்படி, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யுமாறும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் அமல்
மத்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து, தமிழகத்திலும் சில கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விமான நிலையத்தில் பரிசோதனை
இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ஓராண்டுக்கு பிறகு கொரோனா பரிசோதனை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது. இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடக்கிறது.

காய்ச்சல், சளி இருந்தால்..
விமானங்களில் வரும்போது சோர்வாக, இருமல் சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவைகளுடன் இருக்கும் பயணிகளும் இந்த பரிசோதனைக்கு தேர்வு செய்கின்றனர். 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்களில் யாருக்காவது இருமல், சளிஅதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரத்தில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும், அந்த பயணிகள் மருத்துவமனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற அறிவுறுத்தப்படுவார்கள் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications