சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கைகள்... விஜய பாஸ்கர்!!
சென்னை: சென்னையில் இருக்கும் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 250 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 250 படுக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
இதையடுத்து விஜயபாஸ்கர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வரால் மார்ச் 27ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டவர் 2 மற்றும் டவர் 3-ல் பிரத்யேகமாக கோவிட் சிகிச்சை மையம் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் உட்பட 500 படுக்கை வசதிகள், 100 வென்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் உள்ளன.
மேலும், கூடுதல் ஆக்சிஜன் தேவையை சமாளிக்க 20 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் தொட்டி இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும் ஒவ்வொரு கிலோ லிட்டர் திரவ நிலை ஆக்சிஜன் 835 கியூபிக் மீட்டர் வாயு நிலை ஆக்சிஜனாக மாறக்கூடிய தன்மை வாய்ந்தது.
உலகம் முழுக்க ஒரே நாளில் 247067 கொரோனா கேஸ்கள்.. கட்டுக்கடங்காத வேகம்.. 23,097,230 பேர் பாதிப்பு!
இதனால், எவ்வித தங்கு தடையுமின்றி தேவைப்படும் அளவுக்குக் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.
250 மருத்துவர்கள், 400 செவிலியர்கள், 400 மருத்துவம் சார்ந்த பணியாளர்களுடன் சிறப்பாக செயல்படும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கோவிட் சிகிச்சை மையத்தின் மூலம் இதுவரை புறநோயாளிகளாக 21 ஆயிரம் நபர்களும், உள்நோயாளிகளாக 15 ஆயிரத்து 100 நபர்களும் சிகிச்சை பெற்று 13 ஆயிரத்து 600 நபர்கள் குணமடைந்துள்ளனர் (90%).
இதுவரை 18 ஆயிரத்து 200 ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனைகளும், 10 ஆயிரத்து 500 சி.டி.ஸ்கேனும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்து இருந்தார்.