மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வைத்த முக்கிய கோரிக்கை!
சென்னை: நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதால் அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசு திறக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் குரும்பிவயல் கிராமத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஏற்பாடு இல்லாத காரணத்தால் விவசாயிகள் சேர்த்து வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் அழிந்து நாசமாகியுள்ளன.

மிகவும் வேதனை
கண் எதிரிலேயே நெல் மூட்டைகள் அழிந்து நட்டமும் நாசமும் ஏற்பட்டதை பொறுக்க முடியாத விவசாயிகளது கோரிக்கைகளுக்கு உடனடியான தீர்வு காண நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அரசு அதிகாரிகளுக்கு முன்னிலையிலேயே விவசாயிகள் விஷம் குடித்து தற்கொலை முயன்றுள்ள செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

மழையில் நனைந்து நாசம்
தமிழ்நாட்டில் தொடர்ந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்ய மறுப்பதும், இதனால் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்து பெரும் நட்டம் ஏற்படுவதும் தொடர் நிகழ்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இதனால் பல லட்சம் மூட்டை நெல் நாசமாகி விவசாயிகள் சொல்ல முடியாத வேதனைக்கு ஆளானார்கள்.

உணவுத்துறை அதிகாரிகளின் அலட்சியம்
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரும் நெல் முழுமையாக கொள்முதல் செய்யப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பின்னரும், பழைய நிலையிலேயே நெல்கொள்முதல் செய்யப்படாமல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்து நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்திருப்பது உணவுத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது.

தமிழக அரசு
உடனடியாக தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு விவசாயிகள் உற்பத்தி செய்துள்ள முழு அளவு நெல்லையும் தங்கு தடையில்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யாமல் மழையினால் நெல்மூட்டைகள் நனைந்தாலும் அதற்கு அரசு பொறுப்பேற்று அந்த நெல்லையும் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.

உரிய நடவடிக்கை வேண்டும்
விவசாயிகளது நெல்லை கொள்முதல் செய்யாமல் இழுத்தடிப்பது, கொள்முதல் செய்வதற்கு கமிஷன் வசூலிப்பது போன்றவைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதால் தமிழக அரசும், அதிகாரிகளும் அனைத்துப் பகுதிகளிலும் நெல்கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கும், விவசாயிகள் இடையூறு இல்லாமல் தங்களது நெல்லை விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications