இந்த 3 சுரங்கப்பாதை வழியாக போக முடியாது.. மற்ற வழிகளில் டிராபிக் ஓகே.. சென்னையின் தற்போதைய நிலவரம்!
சென்னை: சென்னையில் இன்று காலை நிலவரப்படி ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை ஆகிய 3 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீரடைந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் பிற்பகலில் புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் (பெங்கல்) புயலானது நேற்று மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கத் தொடங்கியது. ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன், புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு 11.30 மணியளவில் முழுவதுமாக கரையைக் கடந்தது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை குறைந்தது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே விடுக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக பிரதான சாலையான ராதாகிருஷ்ணன் சாலை, தண்டையார்பேட்டை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் உடனுக்குடன் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் 9 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. அவற்றில் 3 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. மழைநீர் தேங்கியிருந்த கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் - வீலர், பழவந்தாங்கல், ஆர்பிஐ சுரங்கப்பாதை, பெரம்பூர் அஜாக்ஸ் ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.

இந்நிலையில், சென்னை பழவந்தாங்கல் சுரங்கப்பாதையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. கனமழையால் வெள்ளம் சூழ்ந்து சுரங்கப்பாதை மூடப்பட்டதை அடுத்து, மழைநீர் முற்றிலும் அகற்றப்பட்டு இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது. அதேபோல கனமழையால் நேற்று குளம் போல் காட்சியளித்த சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையிலும் மழைநீர் அகற்றப்பட்டு தற்போது வாகனங்கள் சென்று வருகின்றன.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை ஆகிய 3 சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதன் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications