"10ஆவது மாடியிலிருந்து குதிச்சிடுவேன் பாத்துக்கோ".. 2வது மனைவியை பிளாக்மெயில் செய்தாரா டான்ஸர் ரமேஷ்
சென்னை: ரூ 500 கொடு இல்லாவிட்டால் மாடியிலிருந்து குதித்து விடுவேன் என இரண்டாவது மனைவியிடம் டான்ஸர் ரமேஷ் பிளாக்மெயில் செய்ததாக எனக்கு தகவல் கிடைத்தது என முதல் மனைவி தெரிவித்துள்ளார். ஆயினும் சிறிய வயிற்று வலிக்கே பயப்படும் என் கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்றே தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் பின்புறம் உள்ள மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கூலித் தொழிலாளி, கிடைக்கும் வேலையை செய்து வந்தார். இவர் பிரபுதேவா, மைக்கேல் ஜாக்சன் போல் நடனமாடி அப்பகுதியினரை மகிழ்வித்து வந்தார்.
இந்த நிலையில் ரமேஷின் டான்ஸால் மெய்சிலிர்த்த அப்பகுதி இளைஞர்கள் அவரது நடனத்தை வீடியோவாக எடுத்து டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கத்தில் போட்டனர்.

டான்ஸர் ரமேஷ் ஆன கதை
இதனால் ரமேஷ் டான்ஸர் ரமேஷாக பிரபலமடைந்தார். இவரது டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில்தான் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. இவர் துணிவு படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். அது போல் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார்.

இரு மனைவிகள்
இவருக்கு இரு மனைவிகள், முதல் மனைவி பெயர் சித்ரா. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் ரமேஷுக்கு தொடர்பு ஏற்பட்டு பின்னர் அவரையும் திருமணம் செய்து கொண்டார். அவரது பெயர் இன்பவள்ளி. இந்த நிலையில் அவ்வப்போது இரு மனைவிகளுடன் சண்டை போட்டு கொள்ளும் ரமேஷ் மாறி மாறி இருவரிடமும் இருந்து வந்துள்ளார்.

முதல் மனைவி
இந்த நிலையில்தான் கடந்த மாதம் முதல் மனைவி சித்ராவுடன் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து புளியந்தோப்பு கே.பி. பார்க் குடியிருப்பில் வசித்து வரும் இரண்டாவது மனைவி இன்பவள்ளியின் வீட்டிற்கு சென்றுவிட்டார். இவருடன் புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைத்து இவர்தான் தனது குடும்பம் என கமென்ட் போட்டு வைத்திருப்பார். இதனால் இவருடன் சேர வேண்டாம் என முதல் மனைவியின் உறவினர்கள் தெரிவித்ததாக தெரிகிறது.

டான்ஸர் ரமேஷுக்கு பிறந்தநாள்
இந்த நிலையில் நேற்றைய தினம் டான்ஸர் ரமேஷுக்கு பிறந்தநாள். கே.பி. பார்க் குடியிருப்பில் 10ஆவது மாடியிலிருந்து டான்ஸர் ரமேஷ் நேற்று மாலை விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீஸார் பிரேதத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவல் கேட்டு முதல் மனைவி சித்ரா சம்பவ இடத்திற்கு வந்தார்.

போட்டோ எடுத்து அனுப்பினால் நம்புவோம்
அவர் தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நேற்று 5 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற தகவல் எங்களுக்கு வந்தது. முதலில் நம்பவில்லை, போட்டோ எடுத்து அனுப்பினால் மட்டுமே நம்புவோம் என்றோம். அதன்படி போட்டோ எடுத்து அனுப்பினர். பின்னர் பதறியடித்துக் கொண்டு கே.பி. பார்க் குடியிருப்பிற்கு சென்றோம். அங்கு இன்னமும் கூட எனது கணவரை நாங்கள் பார்க்கவில்லை.

பார்ட்டிக்கு காசு கேட்டாரா ரமேஷ்
இது குறித்து அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். அதில் இன்பவள்ளி சொன்னதால் அவர்கள் கூறியது: தனக்கு பிறந்தநாள் என்பதால் என்னையும் எனது மகள்களையும் பார்க்க வேண்டும் என இன்பவள்ளியிடம் கேட்டாராம். அதற்கு அவர் அனுமதிக்கவில்லையாம். இதனால் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க வேண்டும், அதற்காவது ரூ 500 கொடு என ரமேஷ் கேட்டாராம். அதற்கு அந்த பெண் மறுத்துவிட்டாராம். இதனால் ரமேஷ் விரக்தி அடைந்து காசு கொடு இல்லாவிட்டால் பத்தாவது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்வேன் என ரமேஷ் மிரட்டியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளார்கள்.

நம்பவில்லை
ஆனால் இதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சாதாரண வயிற்று வலி என வந்தாலே என்னை கட்டி பிடித்துக் கொண்டு சித்ரா என்னால முடியலை, என்னை காப்பாற்று, காப்பாற்று என்பார் . அப்படிப்பட்டவர், எப்படி தற்கொலை செய்து கொள்ள முடியும்? எனவே இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸாரிடம் புகார் அளித்துள்ளோம். தற்போது இன்பவள்ளியை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications