ராஜேந்திர பாலாஜிக்கு கட்டம் சரியில்ல.. மீண்டும் மோசடி புகார்.. “புள்ளி வச்சாச்சு இனி ஆக்ஷன் தான்”!
சென்னை: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மீண்டும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது பலரும் புகார் அளித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த பேரையூர் ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் தானம்...3 பேருக்கு மறுவாழ்வு
இந்நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ஒருவர் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ராஜேந்திர பாலாஜி
ஆவின் ஊழல், சொத்துக்குவிப்பு புகார் என அடுத்தடுத்து சிக்கி, தலைமறைவு, கைது, ஜாமீன் என அரசியல் களத்தை பரபரப்பாக்கிவிட்டு, சில வாரங்களாக அமைதியாக இருந்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் லைம்லைட்டுக்கு வரத் தொடங்கியுள்ளார்.
அ.தி.மு.க அமைப்புத் தேர்தலையொட்டி கடந்த வாரம் விருதுநகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் ராஜேந்திரபாலாஜி.
ஸ்டாலின் மீது காட்டம்
ராஜேந்திர பாலாஜி பேசுகையில், தேனிக்கு போன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கிட்ட மின்சாரத்தை காணோம்னு மக்கள் புகார் சொல்றாங்க. தி.மு.க ஆட்சியில மட்டுந்தான் மின் கம்பியில் அணில் நின்னா மின்சாரம் தடைபடுது. இபிஎஸ் ஆட்சியை வேண்டாம்னு சொன்ன மக்கள் இப்ப யூபிஎஸ் தேடி அலையுறாங்க. தி.மு.க எப்ப ஆட்சிக்கு வந்ததாலும் மின்வெட்டுதான் எனக் காட்டமாக விமர்சித்தார்.
ராஜேந்திரபாலாஜி, மீண்டும் தி.மு.க அரசை கடுமையாகப் பேசி வருவதால் தி.மு.கவினர் கொந்தளித்துப் போயுள்ளனர் என நமது செய்தியில் அண்மையில் குறிப்பிட்டிருந்தோம்.
மீண்டும் மோசடி புகார்
இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை மீண்டும் கைது செய்ய ஏற்பாடுகள் தீவிரமாகி வருகின்றன. அதற்கு ஏற்றாற்போல தற்போது ராஜேந்திர பாலாஜி மீது ரூ. 2 கோடி மோசடி புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ராஜேந்திர பாலாஜி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
பணமும் தரல வேலையும் தரல
அந்த புகாரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் எனக்கு நல்ல நண்பர். அரசு வேலை வாங்கி தருவதாக அவர் சொன்னதன் பேரில், 39 பேரிடம் ரூ.2 கோடி அளவுக்கு வசூல் செய்து கொடுத்தேன். இதுகுறித்து அப்போது அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜியிடமும் கேட்டேன். அவரும் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.
ஆனால் சொன்னபடி அரசு வேலை யாருக்கும் வாங்கி கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. அவரும் பதவியை இழந்துவிட்டார்.
கூவத்தில் வீசிடுவேன்
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கொடுத்த பணத்தை உதவியாளர் சுதாகரன் அவரது மனைவி தேவிஸ்ரீயிடம் கேட்டபோது, ராஜேந்திரபாலாஜியின் உதவியாளராக தற்போது இல்லை எனவும் அவரிடம் தான் பணம் இருப்பதாகவும், இனி பணம் கேட்டு தொந்தரவு செய்தால் ஆட்களை வைத்து கொலை செய்து கூவத்தில் வீசிவிடுவேன் என்றும் அவர்கள் மிரட்டுவதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக என்னிடம் பெற்ற ரூ.2 கோடி பணத்தை திருப்பிப் பெற்றுத் தரவேண்டும் என்றும், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
கைதாவாரா
ராஜேந்திர பாலாஜி கடந்த வாரம் தி.மு.க அரசை கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்த நிலையில், அவர் மீதான மோசடி புகார்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மீண்டும் மோசடி புகார்கள் எழுந்து வருவதால், அவர் விரைவில் போலீசாரால் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.