“அவங்கள மாதிரி எனக்கு வேலை இல்லனு நினைச்சுட்டு இருக்காங்களா?” தமிழிசைக்கு உதயநிதி சூடான ரிப்ளை!
சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனத்திற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தது பற்றி தமிழிசை விமர்சித்திருந்த நிலையில், "அவங்கள மாதிரி எனக்கு வேலை இல்லனு நினைச்சுட்டு இருக்காங்களா?" என சூடாகப் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
"துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய்க்கு கோபம் வரும் என்பதற்காக அஜித்துக்கு வாழ்த்துச் சொன்னாரா? என்று தெரியவில்லை என முன்னாள் ஆளுநரும், பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறி இருந்தார். அதுகுறித்து, இன்று உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "அவங்கள மாதிரி எனக்கு வேற வேலை இல்லைனு நினைச்சுக்கிட்டு இருக்காங்களா?" என சூடாக கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றார். இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவசரகால மேலாண்மை மையத்தில் ஆய்வு செய்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
முன்னதாக, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைதளப் பதிவில், "உலக அளவில் சிறப்புக்குரிய 24 ஹெச் துபாய் 2025 மற்றும் தி யூரோப்பியன் 24 ஹெச் சீரிஸ் சாம்பியன்ஷிப் - போர்ஷே 992 ஜிடி 3 கப் கிளாஸ் கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.
நம்முடைய தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை 'அஜித்குமார் ரேசிங்' யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்குமாருக்கு தமிழக விளையாட்டு மேப்பாட்டுத்துறை சார்பாக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், இரவு நேர சாலை பார்முலா 4 கார் பந்தயம் போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித்குமாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத் துறையில் தமிழகத்தை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழகத்துக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.
அதனை விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன், "நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய்க்கு கோபம் வரும் என்பதால் அவர் அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை. உலக அரங்கில் விளையாட்டை முன்னிறுத்துவதற்கு அஜித்துக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, சாமானிய மக்கள் பயன்பெறும் விளையாட்டு திடல்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பதற்கு வன்மையான கண்டனங்கள்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications