தேவர் தங்க கவசம்: உரிமைகோரும் ஓபிஎஸ் & இபிஎஸ்.. தமிழக அரசின் நிலைப்பாடு இதுதான்.. அமைச்சர் விளக்கம்
சென்னை: தேவர் ஜெயந்தி விழா நெருங்குவதால், தங்க கவசம் பெறும் உரிமை யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிமுவினர் மத்தியில் நிலவி வருகிறது . இந்தநிலையில், இவ்விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு என்ன என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் வழங்கப்பட்டது.
இந்த தங்க கவசம் ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின் போது தேவரின் நினைவிடத்தில் பொருத்தப்படுவது வழக்கம்.

தேவர் ஜெயந்தியின் போது
மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி லாக்கரில் இந்த கவசம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேவர் ஜெயந்தியின் போது அதிமுக பொருளாளர் தரப்பில் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்படுவது வழக்கம். அந்த வகையில், முந்தைய ஆண்டுகளில் அதிமுக பொருளாளராக இருந்த ஓபிஎஸ் வங்கி லாக்கரில் உள்ள தேவரின் தங்க கவசத்தை எடுத்து விழா கமிட்டியிடம் ஒப்படைத்து வந்தார்.

ஒற்றைத்தலைமை பிரச்சினையால்
ஆனால், இந்த முறை ஒற்றைத்தலைமை பிரச்சினையால் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு கூட்டப்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே ஓ பன்னீர் செல்வத்தை நீக்குவதாக அறிவித்தது. அதேபோல், அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டார். ஆனால், தனது ஒப்புதல் இன்றி கூட்டப்பட்ட இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

அதிமுகவின் இரு பிரிவினரும்
இந்த நிலையில், வரும் அக். 28 முதல் 30 வரை கொண்டாடப்படும் தேவர் ஜெயந்தி விழாவில் தங்க கவசத்தை பெறுவதற்கு அதிமுகவின் இரு பிரிவினரும் உரிமை கோருகின்றனர். திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் என்ற முறையில் தனக்கே வழங்க வேண்டும் என்று வங்கிக்கு கடிதம் எழுதினார். ஆனால், இந்த கோரிக்கையை வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதிமுவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு
இந்த மனு கடந்த 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை வரும் 26 ஆம் தேதி நீதிமன்றம் ஒத்திவைத்தது. தேவர் ஜெயந்தி விழா நெருங்கி வரும் நிலையில், தங்க கவசம் பெறும் உரிமை யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிமுவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்ற ஆவலும் எழுந்துள்ளது.

உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ
இந்த நிலையில், இது தொடர்பாக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜகண்ணப்பன், ''உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதன்படி தமிழக அரசு நடந்து கொள்ளும்'' என்றார். முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வத்திற்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இதேபோன்ற ஒரு பிரச்சினை எழுந்தது. அப்போது தங்க கவசம் அதிமுகவினர் வசம் ஒப்படைக்காமல் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications