ரவுடிகளுக்கு வருமானம் எப்படி கிடைக்குது?.. "எல்லா சோர்ஸையும் காலி செய்யுங்க".. சைலேந்திர பாபு அதிரடி
தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் மற்றும் முன்னாள், இந்நாள் ரவுடிகள் குறித்த முழு விவரங்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: ரவுடிகளுக்கு எப்படி வருமானம் வருகிறது என விசாரணை நடத்தி, அவ்வாறு பணம் கிடைக்கும் அனைத்து வழிகளையும் தடுத்து நிறுத்துமாறு காவல்துறையினருக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'ஆபரேஷன் மின்னல்' என்ற பெயரில் ரவுடிகளை போலீஸார் பிடித்து வரும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த உத்தரவை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள முன்னாள், இந்நாள் ரவுடிகளின் பட்டியலையும், அவர்களுக்கு வருமானம் எப்படி கிடைக்கிறது என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.
FIRக்கு எஸ்பி அனுமதி தேவையில்லை.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு - பின்னணி என்ன?
சட்டம் ஒழுங்கில் கவனம்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்படும் என்பதே முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிரதான வாக்குறுதியாக இருந்தது. அதன்படியே, தான் ஆட்சிக்கு வந்ததும் உள்துறையை தனது பொறுப்பில் வைத்துக் கொண்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதனிடையே, சமீபகாலமாக தமிழ்நாட்டில் பரவலாக ரவுடிகளின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்குவது அதிகரித்து. மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன.
வெளிமாநிலத்தில் பதுங்கிய ரவுடிகள்
இதையடுத்து, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் 'ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்ற பெயரில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பயந்து பல ரவுடிகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள்.
வருமானம் எப்படி கிடைக்கிறது?
இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் ரவுடிகள் மற்றும் முன்னாள், இந்நாள் ரவுடிகள் குறித்த முழு விவரங்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, முன்னாள் - இந்நாள் ரவுடிகளின் தற்போதைய நிலை என்ன? அவர்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்தும், தவறான வழியில் வரும் வருமானம் என்றால், அதனை உடனே தடுத்து நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வீடு வீடாக 'ரெய்டு'
இந்த உத்தரவை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களிலும் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ரவுடிகளின் வீடு வீடாக சென்று ரெய்டு நடந்து வருவதாகவும் தெரிகிறது. அதே சமயத்தில், முன்பு ரவுடியாக இருந்து தற்போது மனம் திருந்தி வாழ்க்கை நடத்துவோர் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறதா என்பது குறித்தும் தகவல் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.