15ம் தேதி வானத்தை தெறிக்க விடப் போகும் சந்திராயன் 2.. இந்தத் தடவை இதெல்லாம் புதுசு கண்ணா புதுசு!
நிலவை பற்றி ஆராய்ச்சி செய்யும் சந்திராயன் 2 விண்கலம் 15ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.
சென்னை: நிலவை பற்றி ஆராய்ச்சி செய்யும் சந்திராயன் 2 விண்கலம் 15ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ஆனால், சந்திராயன் 1க்கும், 2க்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
சந்திராயன்-2 விண்கலம் வரும் 15-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரோ இதற்கு முன்னர் அனுப்பிய சந்திராயன் 1க்கும், தற்போது அனுப்ப உள்ள சந்திராயன் இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
ரோபோ ரோவர்:
சந்திராயன் 1 விண்கலம் நிலவில் தரையிறங்கவில்லை. ஆனால் சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு ரோபோ ரோவர் கருவியை அனுப்பி நிலவை சுற்றிவந்து ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது சந்திராயன் 2.
எடையில் வேறுபாடு:
சந்திராயன் 1ன் மொத்த எடை 1380 கிலோ தான். ஆனால் சந்திராயன் 2ன் மொத்த எடை 3290 கிலோ. எனவே இதனை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
விக்ரம்:
சந்திராயன் 1 விண்கலம் நிலவில் இருந்து ஒரு குறிப்பட்ட தூரத்தில் இருந்தபடி தான் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆனால் சந்திராயன் 2, நிலவை சுற்றி வந்தும், அதில் தரையிறங்கியும் முழுமையாக ஆய்வு செய்யும். அதற்காக விக்ரம் எனும் தரையிறங்கும் கருவியும், பிரக்யான் எனும் ரோவர் கருவியும் அதில் பொருத்தப்பட்டுள்ளது.
உலக சாதனை:
மேலும், சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதிக்குச் செல்லும். இதற்கு முன்னர் வேறு எந்த நாடும் அந்த பகுதிக்கு விண்கலத்தை அனுப்பியதில்லை. எனவே இது ஒரு உலக சாதனையாக கருதப்படும். சந்திராயன் 2 விண்கலத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.