ராஜராஜ சோழன் விவகாரம்: சங்க இலக்கியத்தை சங்கீ இலக்கியமாக்குவதா? வானதி சீனிவாசனுக்கு தி.வி.க. பதிலடி!
சென்னை: ராஜராஜ சோழன் இந்து மன்னன் அல்ல என இயக்குநர் வெற்றி மாறன் பேசிய விவகாரத்தில் சங்க இலக்கியத்தை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சங்கீ இலக்கியமாக மாற்றுவதாக திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றி மாறன் பங்கேற்று பேசியதுதான் பெரும் விவாதத்துக்குரியதாகி உள்ளது.
வெற்றிமாறன் பேசுகையில், தமிழ் சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியதால் தான் தமிழ்நாடு இன்னும் மதசார்பாற்றதாக திகழ்கிறது.
கலையை சரியாக கையாள தவறினால் நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படும். ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது என்று கூறினார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ராஜராஜ சோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள், காட்டுமிராண்டியா இருப்பாங்க.. பாஜக கடும் விமர்சனம்
சங்க இலக்கியத்தில்..
இது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறுகையில், சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட தொன்மையான தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும், இந்து வழிபாடு பற்றியும் சிவன், பிரம்மா, விஷ்ணு என்று இந்து கடவுள்கள் பற்றியும் விரிவாகவே பேசப்பட்டுள்ளன. மிக முக்கியமான தமிழ் இலக்கியமான சிலப்பதிகாரத்தில், "பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்னா நாவென்ன நாவே" என்று 'நாராயணா" என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.தமிழ் நிலம் என்பது ஆன்மிக பூமி. இந்து பூமி. அந்நிய படையெடுப்பாளர்களால் இங்கு அந்நிய மதங்களும் வந்துள்ளன. பரந்த மனப்பான்மை கொண்ட இந்துக்கள் அவற்றையும் அனுமதித்தனர்.
மன்னர்கள் கட்டிய கோவில்கள்
சோழ, சேர, பாண்டிய, பல்லவ மன்னர்களும், விஜயநகர பேரரசர்களும், நாயக்க மன்னர்களும் கட்டிய 30,000 அதிகமான கோயில்கள், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தமிழகத்தில் சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன. ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தமிழர்களின் அடையாளமாக நிற்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் அங்கிருந்த பூர்வகுடி மக்களையும், பூர்வகுடி மதங்களையும், வழிபாட்டு முறைகளையும் அழித்துவிட்டு, சில நிறுவன மதங்களை நிலை நிறுத்தினார்கள். அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிறுவன மதங்களின் ஆதிக்கம் இருந்து வருகிறது. முகலாயர்கள் காலத்தில் இஸ்லாமிய மதமாற்றமும், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் இங்கு அதிகமாக நிகழ்ந்தன.
சதிவேலைப் பேச்சு
இந்திய விடுதலைக்குப் பிறகும் மத மாற்றங்கள் நிற்கவில்லை. அந்நிய மதங்களை இந்த மண்ணில் நிலைநிறுத்துவதற்காக, இந்த மண்ணின் மதமான இந்து மத கலாசாரத்தை, அடையாளங்களை அழித்து ஒழிக்க, இங்கு பல நூறு ஆண்டுகளாக சதி வேலைகள் நடந்து வருகின்றன. அது இன்னமும் நிற்காமல் தொடர்கிறது என்பதன் சாட்சி தான் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சு. ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிவாலயத்தை கட்டிய ராஜராஜ சோழனை இந்து அல்ல என்று சொல்லவும் இப்போது துணிந்திருக்கிறார்கள். இது கண்டனத்திற்குரியது. இது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் சதி திட்டத்தின் ஒரு பகுதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்த மண்ணில் யாருமே இந்து இல்லை. பிரிவினைவாத சக்திகளை முறியடிக்க, ராஜராஜ சோழன் போன்ற சோழ, சேர, பல்லவ, பாண்டிய மன்னர்களின் வரலாற்றை நாம் ஒவ்வொருவரிடம் கொண்டு செல்ல உறுதி ஏற்போம் என கூறியிருந்தார்.
சங்கீ இலக்கியமா?
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன், சங்க இலக்கியங்கள் இங்கு வழிபாட்டை பேசுகின்றன என்கிறார் வானதி சீனிவாசன் அவருக்கு ஒரு கேள்வி சங்க இலக்கியம் ஏதாவது ஒன்றில் இந்து என்ற சொல் இருக்கிறதா சங்க இலக்கியங்களை சங்கீகள் இலக்கியமாக மாற்ற வேண்டாம் என சாடியுள்ளார்.