ஓவர்நைட்டில் எகிறும் களம்.. ஸ்டாலினின் திடீர் மாற்றம்.. திமிறியெழும் அதிமுக தலைகள்.. என்னாச்சு..!
திமுக, அதிமுகவின் களப்பணிகளில் மாறுதல் ஏற்பட்டுள்ளது
சென்னை: கடந்த ஓரிரு தினங்களில் திமுக - அதிமுகவின் தேர்தல் அதிரடிகளில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் இரு கட்சிகளுமே தங்களின் வியூகத்தை பலப்படுத்தி உள்ளன.
கடந்த வாரம் வரை இருந்த தேர்தல் களம் வேறு.. இப்போதுள்ள தேர்தல் களம் வேறு.. இதற்கு காரணம், வெளியாகி கொண்டிருக்கும் பல்வேறு தரப்பின் கருத்து கணிப்புகள்தான்.
பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்பதை கணிப்புகள் சொல்லி வருகின்றன.. இதனால், பல தொகுதிகளில் திமுக நிர்வாகிகள் மெத்தனமாக இருப்பதாகவும், சரிவர வேலை பார்க்கவில்லை என தலைமைக்கு தகவல்கள் பறந்தன..
கண்டிப்பு
இதனால் தனித்தனியாக போனை போட்டு, அவர்களை கண்டித்தார் ஸ்டாலின். ஆனால், அத்துடன் விடவில்லை.. தன்னுடைய பிரச்சார பிளானையும் மாற்றினார்.. அதாவது ஒருநாளைக்கு 2 மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், திமுக மீது எழுந்து வந்த விமர்சனங்களால், பிரச்சாரம் செய்யும் மாவட்டங்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்டாலின்
இதில் இன்னொரு சிறப்பையும் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.. முன்பெல்லாம் வேனில் இருந்து பிரச்சாரம் செய்த ஸ்டாலின், இப்போது தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிட்டார்.. பழைய பார்முலாவையே கையில் எடுத்துள்ளார்.. கிருஷ்ணகிரி ரோட்டில் திடீரென ஸ்டாலின் நடந்து போவதை பார்த்து மக்கள் ஒரு நிமிஷம் வியந்துவிட்டனர்.. இதற்கெல்லாம் காரணம், சுமூகமாக இருந்த தேர்தல் கள நிலவரம் சற்று மாறியதுதான் என்கிறார்கள்.
செல்வாக்கு
அதிலும், அதிமுகவுக்கு சாதகமான இடங்கள் என்ன என்று பார்த்து, அந்த இடங்களில் திமுக புது வியூகத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளது.. அதேசமயம், கிராமப்புறங்களில் மட்டும் அதிமுக செல்வாக்கை முந்த முடியவில்லை என்றும் ஒரு கணிப்பு கூறுகிறது.. அதனால், அந்த பகுதிகளிலும் களப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இன்னொரு விஷயமும் திமுகவுக்கு பாதகமாக பார்க்கப்படுகிறது. யாரும் தொகுதிகளில் அவ்வளவாக செலவு செய்வதில்லையாம்.. ஆனால், அதிமுகவோ சற்று தாராளம் காட்டுவதாக கூறப்படுகிறது.. இந்த விஷயத்திலும் திமுக ஓவர்டேக் செய்தால் நல்லா இருக்கும் என்கிறார்கள்.
கருத்து கணிப்புகள்
மற்றொரு பக்கம் அதிமுக எடுத்து கொண்டால், அந்த கட்சியையும் கருத்து கணிப்புகள் அசைத்து பார்த்துவிட்டது.. முன்பெல்லாம் நம்பிக்கையுடன் வலம் வந்த அமைச்சர்கள் தற்போது திமுகவுக்கு சாதகமாக வரும் ரிசல்கட்களை கேள்விப்பட்டு சோர்ந்து போயுள்ளனராம்... அதிலும் அந்த 3 முக்கிய அமைச்சர்கள் ரொம்பவே அப்செட்டில் உள்ளதாக சொல்கிறார்கள்.. இவ்வளவு வாரி இறைத்தும், பலனில்லாமல் போகுமோ என்ற கலக்கத்தை இந்த கருத்து கணிப்புகள் அவர்களுக்குள் ஏற்படுத்தி உள்ளதாம்.
சோர்வுகள்
இதே கருத்து கணிப்புகள் தொண்டர்களின் மனநிலைமையும் ஒருவித சோர்வுக்கு உட்படுத்தி உள்ளதாம்.. அதனால், சரியாக களத்தில் வேலை செய்யாமல் தொய்வு ஏற்படுவதாகவும் சொல்கிறார்கள்.. இதை களையும் முயற்சியில் அதிமுக ஜரூராக இறங்கி உள்ளது.. மற்றொரு பக்கம், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய பலமாக உருவெடுத்து வருகிறது..
இலவசம்
இலவசம் இல்லாத திமுகவின் தேர்தல் அறிக்கைக்கு எந்த அளவுக்கு பலம் இருக்கிறதோ, அதே அளவுக்கு இலவச வாஷிங் மெசின், மாதம் ரூ.1500 உதவித் தொகை, இலவச கேஸ் சிலிண்டர்கள் என்ற அதிமுகவின் அறிவிப்பு பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆக மொத்தம் கருத்து கணிப்புகள், இந்த இரு பெரும் கட்சிகளை நாளுக்கு நாள் வெலவெலக்கவும், தலைநிமிரவும் வைத்து வருகிறது.. பார்ப்போம்..!