திமுகவின் அனல் பறக்கும் பிரசாரம் ஓகே.. தேர்தல் பணிகளில் இவ்வளவு பெரிய ஓட்டையை விடுகிறதா அறிவாலயம்?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் திமுகவின் அனல் பறக்கும் பிரசாரம் நாடு முழுவதும் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்களின் அதிரடி பிரசாரம் பொறி கலங்க வைத்து கொண்டிருந்தாலும் தேர்தல் பணிகளில் இவ்வளவு பெரிய ஓட்டையை எப்படி அண்ணா அறிவாலயம் விட்டு வைத்திருக்கிறது என சுட்டிக்காட்டுகின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னமும் 10 நாட்கள்தான் உள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் அத்தனை சீனியர்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இடைவிடாமல் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். களத்தில் நிற்கும் முகவினருக்கு இது ஆகப் பெரும் உற்சாகம்தான்.

லோக்சபா தேர்தல் தொடர்பான இதுவரையிலான அத்தனை கருத்து கணிப்புகளுமே திமுக கூட்டணிக்கு சாதகமாகவே வெளியாகி உள்ளன. அதிமுக, பாஜக வெல்லும் வாய்ப்பிருக்கும் என கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அண்ணா அறிவாலயத்தின் வார் ரூம் மூலமாகவும் உரிய 'கட்டளைகளை' திமுக தலைமை பிறப்பித்தும் வருகிறது.
அதேநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழுவதுமாக நம்புகிற அண்ணா அறிவாலயத்தின் வார் ரூம் முழுமையாக இயங்கிவில்லையே என்கிற குமுறல்கள், ஆதங்கம் வார் ரூம்-க்கு கீழே இருக்கும் திமுக நிர்வாகிகளிடமே பரந்துபட்டு இருக்கிறது என்கின்றனர். இதனை திமுகவை மிக நெருக்கமாக கவனித்து வரும் சீனியர் பத்திரிகையாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதாவது வார் ரூம் என்பது தேர்தல் கட்டமைப்புக்கான அத்தனை படிநிலைகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு செயல்படக் கூடியதுதான். ஆனால் அறிவாலய வார் ரூம் நிர்வாகிகளுக்கும் ஒவ்வொரு தொகுதிக்குமான CLS, FLC எனப்படும் பொறுப்பாளர்களுக்குமான இடைவெளி ரொம்பவே அதிகமாக இருக்கிறது; அதுவும் தபால் வாக்குகளே தொடங்கிவிட்ட நிலையில் இந்த ஒருங்கிணைப்பும் சரி.. வார் ரூம் உடன் இணைந்திருப்பவர்களான CLS, FLC எனப்படும் பொறுப்பாளர்களுக்குமான
செலவினத் தொகையும் சரி எதுவும் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்கிற குமுறல்கள் இருக்கிறதாம். இதனால் வார் ரூம் அளவுக்கும் வார் ரூமுக்கு இணையாகவும் முழு வீச்சில் செயல்பட வேண்டிய தொகுதிகளின் சுமார் 7,000 பொறுப்பாளர்கள் முடங்கியாக வேண்டிய நெருக்கடியில் தவிக்கின்றனராம்.
இதனை திமுக தலைமை போர்க்கால அடிப்படையில் சரி செய்யாமல் போனால் அனல் பறக்கும் பிரசாரம் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகும் என்கின்றனர் அந்த சீனியர் பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications