அரசியல் கட்சிகள் உதவிசெய்யக்கூடாது என்பதா... உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த அவசர வழக்கு
சென்னை: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தனியார் அமைப்புகள், அரசியல் கட்சிகள் நேரடியாக பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான வில்சன் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரை அணுகி திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மக்கள் நலன் கருதி ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டிருந்தாலும் கூட, ஒருபுறம் தினக்கூலி பெறுவோர், ஏழை எளியோர் வேலையின்றி வருமானமின்றி அத்தியாவசியப் பொருட்களை வாங்க சிரமப்படும் நிலை உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தன்னார்வலர்கள், சில தனியார் அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களை வழங்கி வந்தனர். இந்நிலையில் இனி அதுபோன்று செய்யக்கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு நேற்று எச்சரிக்கை விடுத்தது.
இதற்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு, தமிழக அரசு தனது உத்தரவை திரும்பபெற வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்நிலையில் திமுக இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய விதிக்கப்பட்ட தடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என திமுக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
Recommended Video
மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், மதிய உணவு இடைவெளிக்கு பிறகு வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது திமுக.