பதில் சொல்வதில் இருந்து தப்ப முடியாது... ராஜேந்திரபாலாஜி மீது திமுக முன்னாள் அமைச்சர்கள் சாடல்
சென்னை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது துறை ரீதியான விவகாரங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
லாவணி பாடி அதிமுகவில் இழந்த மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்ற திமுகவை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறை கூறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மற்றும் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்.. ஆச்சர்யம் தரும் "டெக்சாமெத்தசோன்" மருந்து.. ஹு நல்ல செய்தி!
எல்லா புகார்களும்
பொதுவாக ராஜேந்திர பாலாஜி எவ்வகை மனிதர் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். சட்டையை கிழிங்க என்பார். கதவை உடைங்க என்பார். எம்.பி.,யை சுடுங்க என்பார். கமல் நாக்கை அறுங்க என்பார். இசுலாமியர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்பார். பாகிஸ்தானுக்கு போக வேண்டியது தானே என்று சொல்வார். பயங்கரவாதம் வரத்தான் செய்யும் என்பார். அண்ணாவே எம்.ஜி.ஆரால் தான் ஜெயித்தார் என்பார். பெரியார் பற்றி ரஜினி பேசியது சரி என்பார். இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்குப் போட வேண்டுமானால் எல்லாப் புகாருக்கும் உள்ளாகக் கூடியவர் அவர்.
பதில் சொல்வது கடமை
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் போதே நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கினைச் சந்தித்து கொண்டிருக்கும் அமைச்சர் அவர். அத்தகைய மனிதர் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் அவரது அறிக்கைக்கு பதில் சொல்லியாக வேண்டி உள்ளது.
படித்து பார்க்கவும்
சட்டமன்றத்தை ஒத்திவைக்கச் சொன்ன தி.மு.க. தலைவர், அதே நாளன்று வடசென்னையில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார் என்கிறார் ராஜேந்திர பாலாஜி. தி.மு.க. தலைவர் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லவில்லை. 'கொரோனா நோய்ப் பரவிவருவதால் உங்களது போராட்டத்தை ஒத்தி வையுங்கள்' என்று மக்களிடம் கோரிக்கை வைக்கத்தான் சென்றார். அது அவரது உரையில் இருக்கிறது. தெளிவான மனநிலையில் அதனைப் படித்துப் பார்க்கவும்!
கடமை தவறியது
'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை குறை சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை அரசாங்கம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குத்தானே இருக்கிறது. இந்தக் கடமையைச் செய்யத் தவறியது அ.தி.மு.க. அரசு. ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை, பொறுப்பை ஒரு எதிர்க்கட்சி செய்திருக்கிறது.
வாழ்வாதாரம் இழப்பு
இலட்சக்கணக்கான மக்களுக்கு மளிகைப் பொருட்களும், காய்கறிகளும், நிதி உதவியும், உணவும் தி.மு.க. கொடுக்கிறதே என்ற ரோசமாவது இந்த அரசுக்கு வந்திருக்க வேண்டும். தி.மு.க. செய்வதை எல்லாம் நாங்கள் தருகிறோம் என்று முன்வந்திருக்க வேண்டும். ஏழைகளின் அழுகுரல், அப்பாவிகளின் கண்ணீர், வாழ்வாதாரம் இழந்தவர் ஓலம் இவர்களது கல் நெஞ்சைக் கரைக்கவில்லை. இன்னும் சொன்னால், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் துயரத்தைக் கூட இவர்கள் துடைக்கவில்லை.
வேலையிழப்பு
கொரோனா காலத்தில் இலட்சக்கணக்கானோர் வேலை இழந்து நிற்கிறார்கள். ஆனால் இந்த கொரோனா காலத்தில் 47 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும், 15 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகவும் எடப்பாடி சொல்லிவரும் பொய்களை வழிமொழிகிறார் ராஜேந்திர பாலாஜி.முதலமைச்சர் உலகம் சுற்றி வந்தார். அதில் எத்தனை தொழில்கள் தொடங்கினார்கள், எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்ற தகவலே இதுவரை இல்லை.
பதில் தர வேண்டும்
பால்வளத் துறையிலேயே ஆயிரத்தெட்டு கோல்மால்கள் நடந்து வருகின்றன. ஆவின் வட்டாரமும் பால் முகவர்களும் சொல்லும் குற்றச்சாட்டுகள் மலையளவு உள்ளன. பால் வாங்குவதில் பெறப்படும் கமிஷன்கள், போலி செக்குகள், நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி பால்விலையை ஏற்றிவிட்டு, புதிதாக ஆறு ஒன்றியங்களை ஏற்படுத்தி நிர்வாகச் செலவுகளை அதிகப்படுத்தியது, ஒன்றியங்களில் அவுட் சோர்சிங் முறையில் இருந்த பணியிடங்களை நேரடி நியமனம் என்ற பெயரில் விற்பனை செய்தது, விதிமுறைகளுக்கு முரணான பணி நியமனங்கள் என்று ராஜேந்திர பாலாஜி பதில் சொல்ல வேண்டிய விவகாரங்கள் பல இருக்கிறது. முதலில் இந்தக் கொள்ளைகளுக்கு வரிசையாக கே.டி.ஆர். பதிலளிக்க வேண்டும்!
பத்திரிகையாளர் மீது தாக்குதல்
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. கூடாரத்தில் ராஜேந்திர பாலாஜியும், ஆளுங்கட்சி சட்ட மன்ற உறுப்பினரும் நடத்திக் கொண்டிருக்கும் உள்குத்து விவகாரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததால் குமுதம் ரிப்போட்டர் பத்திரிகை நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தூண்டிய விவகாரத்தை ஆட்சி அதிகாரத்தால் இன்றைக்கு மறைக்கலாம். ஆனால் அது விசுவரூபம் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறோம்.