”மாமியார் உடைத்தா மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம்” பரந்தூர் விமான நிலையம் பற்றி ஜெயக்குமார்!
சென்னை: விவசாய நிலங்களை அழித்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க திமுக அரசு முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. ஒருபக்கம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மறுபக்கம் இபிஎஸ் ஆதரவாளர்கள் அமைதி காத்துவருகின்றனர். இதனால் இபிஎஸ் தரப்பில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், சென்னையில் மழைநீரோடு, கழிவு நீர் கலக்கும் நிலையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. பருவமழையை எதிர்நோக்கும் சூழலில், மாநகராட்சி, மின்சாரத்துறை உள்ளிட்டோரை முடுக்கிவிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் லேசான மழைக்கே தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது.
'சென்னை பரந்தூரில் புதிதாக விமான நிலையம்' என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்ப திறப்பீங்க? புது தகவல்கள்!
திமுக அரசு
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட பணிகளை, திமுக அரசு பராமரிக்காமல் உள்ளது. திமுக எம்எல்ஏ-க்கள் சம்பளம் மட்டுமே வாங்குகின்றனர். ஆனால் பணிகளில் எந்த வேகமோ, ஆர்வமோ இல்லை என்று தெரிவித்தார்.
இலவசங்கள்
தொடர்ந்து, இலவசங்களை பொறுத்தவரை திமுகவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. தமிழ்நாட்டில் இலவச திட்டங்கள் கொண்டு வரப்பட்டது ஏழை மக்களுக்காக மட்டும்தான். இலவசம் என்பது மக்களுக்கான சமூக நலத்திட்டங்கள் தான். இலவச லேப் டாப்-ன் பயன்பாடு கொரோனா காலத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.
சபரீசன் பற்றி ஜெயக்குமார்
தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 12 கொலை மட்டுமே என்று கூறுவது, தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்னையாக தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் கம்பீரமாக இருந்த காவல்துறை, திமுக ஆட்சியில் ஸ்டாலின் குடும்ப ஏவல் துறையாக செயல்படுகிறது. ஆந்திராவில் என்டி ராமாராவ் ஆட்சியை கவிழ்த்து, அவரது மருமகன் சந்திர பாபு நாயுடு ஆட்சியில் அமர்ந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு மருமகன் சபரீசன், மகன் உதயநிதி என்று சமாதானம் செய்வதற்கு நேரம் சரியாக உள்ளது. விரைவில் ஆந்திரா நிகழ்வு போல், தமிழ்நாட்டிலும் நடக்கும் என்று விமர்சித்தார்.
பரந்தூர் விமான நிலையம்
அதேபோல் திமுக ஒரு சந்தர்ப்பவாத அரசியல் கட்சி. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 8 வழிச்சாலை சிறந்த திட்டம். கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு, மரங்களுக்கு இழப்பீடு, வீடுகளுக்கு இழப்பீடு என்று அறிவித்தோம். ஆனாலும் திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் பரந்தூர் விமான நிலையம் அமைப்போம் என்று கூறுகின்றனர்.
மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பதற்கு ஏற்ப இன்று திமுக அரசு விமான நிலையம் அமைக்க இழப்பீடு, மாற்று நிலம் என்று அறிவித்து வருகின்றனர். பரந்தூரில் விவசாய நிலங்கள் அழித்து விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காகவே, திமுக விமான நிலையம் அமைக்க உள்ளது என்று தெரிவித்தார்.