ஒரே நாடு ஒரே தேர்தல்! திமுக கடும் எதிர்ப்பு..டெல்லிக்கு பறந்த முதல்வர் ஸ்டாலினின் கடிதம்! என்னாச்சு?
சென்னை : தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
பாஜக தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இன்னும் ஓராண்டில் அதாவது 2024 ஆம் ஆண்டு மே மாதம் வாக்கில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற இருக்கிறது.
இதையொட்டி பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அஸ்திரத்தை மீண்டும் கையில் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே ரேஷன் வரிசையில் ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கத்தை பாஜக தற்போது எடுத்திருக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஜெ. ஆதரித்த திட்டம் அது.. அதிமுகவின் ஆதரவு இருக்கும்.. ஓபிஎஸ் பேட்டி!
ஒரே நாடு ஒரே தேர்தல்
கடந்த சில வருடங்களாகவே இந்த பேச்சு அடிக்கடி எழுவதும் பின்னர் அடங்கிப் போவதும் வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 5 மாநில சட்ட சேவை தேர்தல் முடிவுகள் வெளியான போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்து காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனால் ஆளும் பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
அதிமுக ஆதரவு
இதற்கு பிராந்திய கட்சிகளின் ஆதரவையும் அது எதிர்நோக்கி நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த அதிமுக தற்போது இந்தத் தேர்தல் திட்டத்திற்கு தங்களது இசைவை தெரிவித்து இருக்கிறது. எடப்பாடி தரப்பும், ஓபிஎஸ் தரப்பு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளன.
திமுக எதிர்ப்பு
இது மட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களது கருத்தை தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் கடிதம் ஏற்கனவே அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின்
டெல்லியில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக எம்பி வில்சன் கொடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய சூழலில் அதிமுக மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்திருக்கும் நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பாஜகவின் புற அழுத்தம் காரணமாகவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக ஆதரிப்பதாக மதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கின்றன. ஆனால் கடித்தத்தில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்த கருத்துகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.