இந்த 3 முக்கிய பிரச்சினைகள்.. நாடாளுமன்றத்தை தெறிக்க விடப்போகும் தி.மு.க எம்.பி.க்கள்.. செம பிளான்!
சென்னை: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. வருகிற ஆகஸ்ட் 13-ம் தேதி வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 19 அமர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடாளுன்றத்தை சுமுகமாக கொண்டு செல்வது மிகவும் முக்கியமாகும். இதன்படி அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியது.
மகா., கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை தருகிறது: 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மோடி
நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியை கைப்பற்றிய பிறகு நடக்கும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுவாகும். தமிழ்நாட்டின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க தி.மு.க எம்.பி.க்கள் களமிறங்க உள்ளனர். நாடாளுமன்றத்தில் என்னென்ன திட்டங்கள் குறித்து பேச வேண்டும்? எதனை எதிர்க்க வேண்டும்? கேள்வி நேரத்தின்போது தி.மு.க எம்.பி.க்கள் எப்படி செயல்பட வேண்டும்? என்பது குறித்து தி.மு.க. எம்.பி.க்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.
மேகதாது அணை விவகாரம்
அப்போது பல்வேறு ஆலோசனைகளையும், யோசனைகளையும் தி.மு.க எம்.பி.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு பிடிவாதமாக உள்ள நிலையில் மேகதாது அணை விவகாரத்தை பெரிய அளவில் கிளப்ப தி.மு.க எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என்று நாடாளுமன்றத்திலேய மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு அறிவித்ததன் மூலம் மேகதாது விவகாரம் நாடாளுமன்றத்தில் பற்றி எரிய போகிறது என்பது தெளிவாகிறது.
நீட் தேர்வும் முக்கியம்
இதுதவிர நீட் தேர்வு முடிவு மத்திய அரசின் கையில் என்பதால் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை திமுக எம்.பி.க்கள் அழுத்தமாக பதிவு செய்யவுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட 13 பிரச்சினைகளை மையமாக வைத்து மற்ற எதிர்கட்சிகளுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க திமுக எம்.பி,க்கள் தயாராக இருக்கின்றனர்.
ஸ்டேன் ஸ்வாமி மரணம்
தமிழ்நாட்டை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் ஸ்வாமி சிறையில் மரணம் அடைந்ததை தொடர்ந்து இதுபற்றி உரிய விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் தி.மு.க எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர். இவை தவிர கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்குவதில் மத்திய அரசு மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் இவை குறித்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய திமுக எம்.பி.க்கள் தயாராக இருக்கின்றனர். மொத்தத்தில் நாளை முதல் அமளி, துமளியால் நாடாளுமன்றம் பரபரப்பாக போகிறது என்பது மட்டும் தெரிகிறது.