நூதன ஏமாற்றுவேலை.. மக்களே இதில் மட்டும் சிக்கிடாதீங்க.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆர்பிஐ அறிவுரை!
சென்னை: சமீப நாட்களாக அதிகரித்து வரும் நூதன முறை மோசடி காரணமாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.
வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்காக நிறைய மோசடி கும்பல்கள் நாடு முழுக்க உருவெடுத்துள்ளது. தொடக்கத்தில் ஏடிஎம் மெஷினில் ஸ்கிம்மர் வைத்து போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து அதன் மூலம் மோசடி வேலைகளை செய்து வந்தனர். இப்போதெல்லாம் இது பழைய டெக்னிக் ஆகிவிட்டது.
இப்போதெல்லாம் நேரடியாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து வங்கி கணக்கில் மாற்றம் செய்வதாக கூறி கார்ட் மேலே இருக்கிற 16 நம்பர் சொல்லுங்க சார் என்று கேட்டு மோசடி செய்கிறார்கள். முக்கியமாக வடஇந்தியாவை சேர்ந்த பல மோசடி கும்பல் அரைகுறை தமிழில் இப்படி மோசடி செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள்.

ஆர்பிஐ
இப்படி மோசடி செய்பவர்களிடம் மக்கள் பாதுகாப்பாக, கவனமாக இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ பலமுறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. சமீபத்தில் கூட ஸ்டேட் பேங்க் ஏடிஎம் டெபாசிட் மெஷினில் பணம் எடுத்துவிட்டு சென்சாரை மறைத்து, பணம் எடுக்காதது போல மோசடி செய்து பல லட்சங்களை வடஇந்திய கும்பல் ஒன்று சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பலும் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டது.

மீண்டும் மோசடி
மீண்டும் தற்போது வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து மோசடிகள் நடக்க தொடங்கி உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. பெரும்பாலான ஏடிஎம் கார்டுகள் 2021ம் ஆண்டோடு முடிகின்றன. இதனால் பலர் தங்கள் கிரெடிட், டெபிட் கார்டுகளை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதை பயன்படுத்திதான் தற்போது மோசடி நடைபெறுகிறது. அதே பழைய முறையை பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள்.

ஏடிஎம் கார்ட்
உங்கள் கார்டின் வேலிடிட்டி முடிய போகிறது.. அதை புதுப்பிக்க வேண்டும். உங்கள் கார்ட் எண்ணை சொல்லுங்கள் என்று கேட்டு வாங்கி, பின்னர் ஓடிபியையம் கேட்டு வாங்கி மோசடியில் ஈடுபடுகிறார்கள். கடந்த இரண்டு மாதமாக இந்த சம்பவம் அதிகரித்து உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறைய புகார்கள் வங்கிகளுக்கு வர தொடங்கி உள்ளது.

அறிவுரை
இதனால் இந்த நூதன பழைய மோசடி முறையில் மக்கள் சிக்க வேண்டாம் என்று ஆர்பிஐ அறிவுரை வழங்கி உள்ளது. வங்கி விவரங்களை கேட்டு யார் கால் செய்தாலும் அந்த விவரங்களை பகிர கூடாது. எந்த வங்கியும் போன் செய்து உங்கள் ஏடிஎம்மில் உள்ள எண்களை கேட்காது. அதேபோல் எந்த வங்கியும் ஓடிபியும் கேட்காது. அதனால் மக்கள் மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications