தமிழ்நாடு முழுக்க நேற்று ஒரே நாளில் போக்குவரத்து போலீஸ் செய்த பெரிய சம்பவம்.. குவிந்தது கோடி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து போலீசார் நேற்று திடீரென நடத்திய மிகப்பெரிய வாகன சோதனையில் மொத்தம் 1,054 விதிமீறல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வாகனங்களிடம் இருந்து ரூ.1.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்து போலீசார் அடிக்கடி மிகப்பெரிய அளவில் வாகன சோதனை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தினமும் வாகன சோதனை நடக்கிறது என்றாலும், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆகிய நாட்களில் வாகன சோதனை தமிழ்நாடு முழுக்க முழு வீச்சில் நடைபெறும். சென்னையை பொறுத்தவரை ஞாயிறுகளில் வாகன சோதனை மிக தீவிரமாக இருக்கும். இருவர் பயணிக்கும் போது அதில் ஒருவர் மட்டும் ஹெல்மெட் அணிந்து சென்றால், 500 அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னையில் தலைகவசம் அணியாமல் உங்களால் 2 கிலோ மீட்டர் தூரத்தை கூட ஞாயிறுகளில் தாண்டிவிட முடியாது. அதேபோல் கார்கள், சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் என எல்லாமே கண்டிப்பாக வாகன சோதனைகளை சந்திக்காமல் கடந்து செல்ல முடியாது. இந்த சோதனை ஒருபுறம் எனில் திடீரென மிகப்பெரிய அளவில் சோதனை நடத்தி அபராதம் வசூலிப்பதை போலீசார் வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி தான் நேற்று சோதனை நடந்தது.
இதுபற்றி தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு முழுவதிலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களால் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
5 ஆயிரத்து 463 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதில், 1,054 வாகனங்களில் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில், 179 வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி வந்தன. 150 வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி வந்தன. 125 வாகனங்களில் பிரேக் லைட் செயல்படாமல் இருந்தன. 37 வாகனங்கள் உரிமம் மீறி செயல்பட்டன. 58 வாகனங்கள் வரி செலுத்தாமல் இருந்தன.
76 வாகனங்கள் தகுதிச்சான்று இல்லாமல் இருந்தன. 129 வாகனங்கள் காப்பீட்டு சான்று இல்லாமல் இருந்தன. 123 வாகனங்களின் ஓட்டுநர்களிடம் முறையான ஓட்டுனர் உரிமம் கிடையாது. இப்படி பல்வேறு வாகனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு வாகன தணிக்கை மூலம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமாகவும், வரியாவும் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
கோடை விடுமுறைக்கு பிறகு, தமிழகம் முழுவதிலும் உள்ள 34 ஆயிரத்து 835 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. குறைபாடுகள் உள்ள பள்ளி, கல்லூரி பஸ்கள் மீண்டும் பழுது நீக்கம் செய்யப்பட்ட பிறகே தகுதிச்சான்று ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அனைத்து வகை வாகனங்களின் தணிக்கையும் தொடரும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications