சாயும் "திமுக".. நிறம் மாறும் கூட்டணி?.. ஸ்டாலின் தரும் கிரேட் மெசேஜ் இதுதான்.. "தாமரைகள்:" மலருமோ?
பாஜகவுக்கு மாற்றாக வலிமையான கூட்டணியை ஸ்டாலின் ஏற்படுத்துவாரா
சென்னை: தேசிய அளவில் முக்கிய கவனத்தை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.. ஆனாலும், அவர் எந்த பக்கம் சாய போகிறார் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளது.. 10 வருடத்துக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ள திமுக, இந்த முறையும் எம்பி தேர்தலில் கூடுதல் கவனத்தை திருப்பி வருகிறது.
மேலும், தேசிய அரசியலில் மிகப்பெரிய அளவுக்கு பங்காற்றிட வேண்டிய நிலைமையில், முதல்வர் ஸ்டாலினும் உள்ளார்.. அதேசமயம், அவர் யாருக்கு ஆதரவு தருவார்? என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
நல்லரசு செய்த அரசனை 'வஞ்சகத்தால்' வீழ்த்தினாலும் மக்களிடம் புகழ் மறையாது.. ஸ்டாலின் ஓணம் வாழ்த்து
உதயசூரியன்
இந்த முறை ஆட்சியை திமுக பிடித்ததற்கு முக்கிய காரணமே, சட்டசபை தேர்தலில் வகுத்த வியூகங்களும், கூட்டணிகளும்தான்.. தேவையான கட்சியை மட்டுமே கூட்டணிக்குள் வைத்துக்கொண்டது.. அப்படியே கூட்டணியில் இணைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தை ஒதுக்கி தந்து போட்டியிடவும் வைத்தது.. அந்தவகையில், மெகா மற்றும் வலிமையான கூட்டணியை அமைப்பதில்தான், கடந்த முறை எடப்பாடி பழனிசாமி முதல் சறுக்கலை கண்டார்.. மற்றொருபக்கம் பலம்பொருந்திய கூட்டணிதான், திமுக அரசுக்கு அஸ்திரவாரத்தை போட்டு தந்தது என்பதை மறுக்க முடியாது.
பிணக்கம் - இணக்கம்
இப்போது எம்பி தேர்தல் என்பதால், கூடுதல் கவனத்தை கூட்டணி பக்கம் செலுத்த உள்ளார்.. இதில் பாமக மாறி மாறி கூட்டணி வைக்கும் என்பதால், அதை உறுதியான கூட்டணிக்குள் அடைக்க முடியாது.. ஆனால், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்களை திமுக அவ்வளவு எளிதாக விட்டுவிடாது என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு.. இந்த உறுதியான கணிப்பு காங்கிரஸ் பக்கம் திமுகவுக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் தற்போதையே சந்தேகம்.
பெருந்தலைகள்
காரணம், பாஜகவுக்கு எதிரான மாற்று அரசியலை ஸ்டாலின் முன்னிறுத்தி வருவதால், தேசிய அளவில் கவனிக்கப்படும் தலைவராக உயர்ந்துள்ளார்.. முன்னதாக, பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா களமிறங்கினார்.. ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவும் இதற்கான முயற்சியை கையில் எடுத்து தோற்றுவிட்ட நிலையில், மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கியும் பெரிய பலன் கிடைக்கவில்லை.. இவர்கள் அனைவரையும்விட, "பாஜக எதிர்ப்பு" விஷயத்தில் ஸ்டாலின் தொடர்ந்து உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
கலர் மாறாத திமுக
திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், காங்கிரஸ் மண்டை காய்ந்து உள்ளது.. திமுக கூட்டணியில் தம்மை சேர்த்து கொள்ளுமா? அல்லது கழட்டிவிடுமா? என்ற குழப்பம் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
தகரும் கோட்டைகள்
இதற்கு காரணம், தங்களுக்கு நேர் அரசியல் எதிரியான ஆம் ஆத்மியுடன் ஸ்டாலின் நெருக்கம் காட்டி வருவதுதான்.. பஞ்சாப் முதல் காங்கிரஸின் கோட்டைகளை ஆம் ஆத்மி தகர்த்து வருவதால், பாஜகவைவிட, ஆம் ஆத்மி மீதான கடுப்பு காங்கிரசுக்கு அதிகமாகவே உள்ளது.. அப்படிப்பட்ட கட்சியுடன் ஸ்டாலின் ஏன் நெருக்கமாக உள்ளார்? என்ற சந்தேகமும் காங்கிரசுக்கு எந்நேரமும் அடிமனதில் இருக்கத்தான் செய்கிறது..
காய் நகர்த்தல்
அந்த பக்கம் மம்தா, இந்த பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால், இதற்கு நடுவில் பினராய் என மாநில வாரியான ஆதரவையும், நல்லிணக்கத்தையும் ஸ்டாலின் கடைப்பிடித்து வருவதும் காங்கிரசுக்கு மேலும் குழப்பத்தை தந்துள்ளது.. காங்கிரசும் தேவை, காங்கிரசுக்கு எதிரானவர்களுடனும் உறவு என்பதை எப்படி பார்ப்பது? திமுக காங்கிரஸை கழட்டிவிடுமா? யாருடன் கூட்டணி வைக்கும்? என்றெல்லாம் கேள்விகளும் கிளம்பி உள்ளன.. ஆனால், மிக சரியான காய்நகர்த்தலுடன்தான் பயணிக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதாவது, நான் ஒன்றும் உங்களை மட்டுமே நம்பி இல்லை, தேசிய அரசியலில் பல கட்சிகள் ஆதரவாக உள்ளன என்பதுதான், காங்கிரஸ் கட்சிக்கு ஸ்டாலின் தரும் மெசேஜ்ஜாக உள்ளதாம்.
மெசேஜ்ஜா?
அதுமட்டுமல்ல, காங்கிரஸை அவ்வளவு சீக்கிரம் திமுக கூட்டணியில் இருந்து கழட்டியும் விடாது என்கிறார்கள்.. ஏனெனில், பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்க போவதாக, போலி தகவல்கள் சமீபகாலமாக பரபரத்து வரும் நிலையில், அவைகளை நொறுக்கி காட்டும் நிர்ப்பந்தம் திமுகவுக்கு உள்ளது.. இதை காங்கிரசுடன் நெருங்கிதான் செயல்படுத்த முடியும்.. அதனால்தான், ராகுல்காந்தி பாதயாத்திரை நேரில் வாழ்த்து என்பன போன்ற நடவடிக்கைகளில் ஸ்டாலின் இறங்க வேண்டி உள்ளது.. ஒருபக்கம் தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிரான களத்தை அமைத்துக் கொண்டே மறுபுறம், தமிழகத்தில் வலுவான கூட்டணியையும் ஸ்டாலின் கட்டமைக்க வேண்டி உள்ளது.
இடியாப்பம் சிக்கல்
இன்னொன்றையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. திமுக தனித்து போட்டியிட்டால், இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதிலும் சிக்கல் உள்ளது.. ஏற்கனவே, எடப்பாடி தரப்பு காங்கிரஸை மூவ் செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.. பாஜகவை வெறுப்பேற்ற இப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எடுத்துக் கொண்டாலும், திமுக இங்கு விழிப்பாக இருக்க வேண்டும்.. அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் திமுக தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமானால், அது காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இணைந்து சென்றால் மட்டுமே சாத்தியம் என்பதையும் அழுத்தமாக பதிவு செய்கிறார்கள்....!