தந்தையின் குடிப்பழக்கம், பாலின பாகுபாடு.. கல்வியை இழந்த 30 வயது பெண்ணின் கதை.. டாக்டர் பரூக்
குடும்பத் தலைவர் குடித்தால் அந்த குடும்பம் எத்தகைய அளவுக்கு சீரழியும் என்பதை டாக்டர் பரூக் விளக்கியுள்ளார்.
சென்னை: ஒரு குடும்பத் தலைவரின் குடிப்பழக்கம் அந்த குடும்பத்தையே எப்படி புரட்டி போடுகிறது என்பதற்கு ஒரு உண்மைச் சம்பவத்தை உதாரணமாக விளக்கியுள்ளார் சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: கிளினிக்கில் 30களின் தொடக்கத்தில் இருக்கும் சகோதரி என்னை சந்திக்க வந்திருந்தார். நோய் குறித்து கேட்டறிந்து முடித்த பின் கல்வி குறித்து கேட்டறிந்தேன். சகோதரி பத்தாம் வகுப்பு படித்திருப்பதாகக் கூறினார்.
30 வயது என்பது 1990க்கு பின்பான காலம் தமிழ்நாட்டில் பெண்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்ட காலம் அது. எனினும் ஏன் பத்தாம் வகுப்போடு நின்றார் என்று மனம் கேட்க விரும்பியது. கேட்டேன் "ஏன்மா டென்த்தோட நின்னுட்டீங்க?" "நான் நிக்கல சார். எனக்கு படிக்கணும்னு அவ்ளோ ஆசை சார்" அவரும் இது குறித்துப் பேசுவதற்கு சற்று ஈடுபாடுடன் தோன்றியதால் பேச்சு தொடர்ந்தது.
என்னாது நான்-வெஜ் சாப்பிடுறது கெட்ட பழக்கமா.. யாரு சொன்னா.. டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கம்
நிறுத்திட்டாங்களா
"அப்பறம் ஏன்.. நிறுத்திட்டாங்களா?" "இல்ல சார்.. அப்பா நான் டென்த் படிக்கும் போது திடீர்னு இறந்துட்டார் சார்" "மன்னிக்கனும் மா.. தேவையில்லாம நினைவுகள் எதையும் கிளறிவிட்டேனோ" "அதெல்லாம் இல்ல சார்.. சரியான குடிகாரர் சார். மஞ்சள் காமாலை வந்து இறந்து போய்ட்டார். அவரு இறந்ததும் குடும்ப சூழ்நிலைனால என்ன வேலைக்கு எங்கம்மா அனுப்பிச்சுட்டாங்க" "உங்க கூட பொறந்தது எத்தனை பேரு?""ஒரு தங்கச்சி கடைசியா தம்பி" "அவுங்க என்ன படிச்சாங்க?" "தங்கச்சி பன்னெண்டாவது..
அப்பாவை பிடிக்காது
"அப்பாவ நினைச்சா உங்களுக்கு இப்ப என்ன தோணுது?" "எங்களுக்கு அவர புடிக்காது சார். டெய்லியும் அம்மாவ குடிச்சுட்டு வந்து அடிப்பாரு.. அவரு போனதால தான் சார் நானும் என் தங்கச்சியும் படிக்க முடியாம போச்சு" "ஒருவேளை முதல் பிள்ளையா உங்க தம்பி பொறந்துருந்தா அவன வேலைக்கு அனுப்பிச்சுருப்பாங்களா? படிக்க வச்சிருப்பாங்களா மா? " "கண்டிப்பா அப்பவும் அவன தான் சார் காலேஜ் படிக்க வச்சுருப்பாங்க.. அவன் பையன்ல சார்" ( ஏக்கத்துடன் கூறுகிறார்).
எத்தனை பிள்ளைங்க
"உங்களுக்கு எத்தனை பிள்ளைங்க மா?" "ஒரு பையன் ஒரு பொன்னு சார்" "நீங்க ரெண்டு பேர்கிட்டயும் பாகுபாடு காட்ட மாட்டீங்கனு நினைக்கிறேன்" "கண்டிப்பா சார்.. ரெண்டு பேரையும் நல்லா படிக்க வைப்பேன் . என் பொண்ணு தான் சார் நல்லா படிக்கிறா" "சூப்பர் மா.. உங்க கணவர் தண்ணி அடிக்கிறாரா?" "நானும் என் தங்கச்சியும் சின்ன வயசுல பட்ட பாட்டுக்கு எங்க ரெண்டு பேர் புருஷங்களும் தண்ணி அடிக்காதவங்களா கெடச்சுட்டாங்க சார்.. நல்லா இருக்கோம். எங்க அம்மா தான் பாவம்"
வலி நிரம்பிய கதைகள்
ஒவ்வொருவருக்குப் பின் தான் எத்தனை வலி நிரம்பிய கதைகள். அந்தக் கதைகளில் இருந்து பெறும் ஞானம் தான் எத்தனை வலிமையாக இருக்கிறது. குடி இரு பெண்களின் படிப்பைக் கெடுத்திருக்கிறது. பெண்கள் பொருளாதாரம் ஈட்டும் நிலையில் இருந்தால்
குடும்பம் ஒருவரையே நம்பி திடீரென அவர் இறக்கும் போது குடும்பக்கப்பல் தரை தட்டும் நிலை இருக்காது. பெண் கல்வி - வேலைவாய்ப்பு - பொருளாதாரத் தன்னிறைவு போன்றவை குடும்பத்திற்கு இன்றியமையாதவை. அதை நோக்கி நமது சமூகம் நகர்வதும் அது குறித்து சிந்திப்பதும் பெண்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவி செய்வதும் முக்கியமானவை. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா குறிப்பிட்டிருந்தார்.