விடாத கி.வீரமணி.. சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.3 முதல் பிரசார இயக்கம்
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த கோரி பிரசார இயக்கத்தை திராவிடர் கழகம் தொடங்கும் என்கிறார் கி.வீரமணி
சென்னை: சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 3-ந் தேதி முதல் பிரசார இயக்கத்தை திராவிடர் கழகம் தொடங்க உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி மதுரையில் நேற்று முன்தினம் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது: தென்பகுதியில், சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் அன்றைக்கு அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், அடிக்கல் நாட்டப் பட்ட திட்டம் முடிந்திருந்தால், மிகப்பெரிய அளவிற்கு மாறுதல்கள் வந்திருக்கும். அது சாதாரண மாறுதல் அல்ல; இன்றைக்கு ஒரு பெரிய வளமான தமிழ்நாட்டைப் பார்த்திருப்போம்; அதிலும் தென்பகுதி செல்வம் கொழிக்கக் கூடிய பகுதியாக இருந்திருக்கும்.
சேது கால்வாய் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் தெரியுமா? பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் விளக்கம்
நம்முடைய இளைஞர்கள் இன்றைக்குச் செல் வம் சேர்க்க இன்னொரு நாட்டிற்கோ, துபாய்க்கோ போகமாட்டார்கள்; அந்த நாட்டில் இருக்கக் கூடியவர்கள் இங்கே வரக்கூடிய அளவிற்கு, அவர்களை ஈர்க்கக் கூடிய அளவிற்கு இங்கே திட்டங்கள் உருவாகி இருக்கும். திட்டமிட்டே இதனைத் தடுத்தார்கள். அதுதான் வேதனை! மிகப்பெரிய கொடுமை! ? மேனாள் முதல மைச்சர் ஜெயலலிதா அவர்கள்தான் முதலில் ஆரம்பித்தார்கள்; ''சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறினால், கப்பல் ஓடாது; அந்தத் திட்டம் அறவே கூடாது'' என்று சொன்னார்கள்.ஏன்? அன்றைய காலகட்டத்தில், அதற்கடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருந்தது; அந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்ற காரணத்தினால்தான். அதுதான் பா.ஜ.க.வினுடைய நோக்கமும்.
சேது சமுத்திரக் கால்வாய் என்று அது பொதுவாக அழைக்கப்பட்டாலும்கூட, உண்மையில் அது தமிழன் கால்வாய்தான். அதைத்தான் ஆதித்தனார் அவர்களும் சொன்னார். இனிமேல் நாங்கள் தமிழன் கால்வாய் - திராவிடன் கால்வாய் என்றுதான் சொல்வோம். இது ராமர் கட்டிய பாலம் என்றும் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் கட்டினான் என்றும் கதைக்கிறார்கள். 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? அடுத்தபடியாக பொருளாதாரம் சரியப் போகிறது என்று சொல்கிறார்கள்; அமெரிக்காவை நம்பி வேலைக்குப் போனவர்கள் மீண்டும் வரப் போகிறார்கள். நம்முடைய அரசுக்கே ஒரு பெரிய தலைவலி. ஏற்கெனவே கஜானா காலியாக இருக்கிறது. ஆகவே, இதுபோன்ற திட்டங்கள் வரவேண்டாமா? தென்மாநிலம் கொழிக்கவேண்டாமா?
நியாயமாக இராமர் என்ற ஒருவர் இருந்திருந்தால், டி.ஆர்.பாலு அவர்களின் கனவில் தோன்றி, ''டி.ஆர்.பாலு அவர்களே, நீங்கள் நரகத்திற்குப் போய்விடுவீர்கள்; வீணாக நரகத்திற்குப் போகாதீர்கள். மோட்சத்தில் உங்களுக்கு இடம் தயாராக இருக்கிறது. என்னிடம் வந்துவிடுங்கள்; நான் கட்டிய பாலத்தை உடைக்காதீர்கள்'' என்று சொல்லியிருப்பாரே! சென்னையில் உரையாற்றும்பொழுது கலைஞர்தான் கேட்டார், ''ராமன் பாலம் கட்டினான், ராமன் பாலம் கட்டினான் என்று சொல்கிறீர்களே, ராமன் என்ன என்ஜினியரா?'' என்று கேட்டார். ஜெயலலிதாவின் தலைமையில் இருந்த அ.தி.மு.க. மிகப்பெரிய அளவிற்கு இந்தத் திட்டத்தை செய்யக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டார்களோ; அதே அ.தி.மு.க. இன்றைக்கு நான்கு பிரிவாக இருந்தாலும்கூட, எல்லோரும் சேர்ந்து, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேண்டும்; அதை எதிர்க்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் ஓட்டுப் போட்டார்களே, அப்பொழுதே - டி.ஆர்.பாலு வெற்றி, தி.மு.க. வெற்றி, கூட்டணி வெற்றி பெற்றது என்பதற்கு அச்சார வெற்றியாகும் அது. அதற்கடுத்து பா.ஜ.க. என்ன சொல்கிறது - நாங்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு எதிரியல்ல; அதை நிறைவேற்றவேண்டும்; ஆனால், இராமர் பாலம்தான் பிரச்சினை என்று சொன்னார்கள். அதற்கான பதிலை ஒன்றிய அமைச்சரே சொல்லி விட்டாரே! இராமன் பாலம் என்ற ஒன்று இருந்ததற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று.
இப்பொழுது பிரச்சினை இராமனுக்கும், எங்களுக்குமா? இல்லை.பிரச்சினை என்பது வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், வறுமை ஒழிப்பிற்கும்தான். இளைஞர்களே, உங்களுடைய எதிர் காலத்தைக் கருதி, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்காக ஒரு பெரிய இயக்கத்தை நாம் நடத்தவேண்டும். பிப்ரவரி 3 ஆம் தேதி - அண்ணா நினைவு நாளன்று ஈரோட்டில் அந்தப் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறேன். இவ்வாறு கி.வீரமணி கூறினார்.