அண்ணா வகித்த பதவி மீது யாருக்கு தான் ஆசையில்லை...? திமுகவின் 4-வது பொதுச்செயலாளராகும் துரைமுருகன்
சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 4-வது பொதுச்செயலாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் மூத்த நிர்வாகியும், கருணாநிதியின் மனம் கவர்ந்த தம்பிமார்களில் ஒருவருமான துரைமுருகன்.
பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் என திராவிட இயக்க மூத்த முன்னோடிகள் அலங்கரித்த திமுக பொதுச்செயலாளர் பதவி இப்போது துரைமுருகன் வசம் செல்கிறது.
இந்நிலையில் திமுகவில் துரைமுருகனுக்கு இணையாக டி.ஆர்.பாலுவும் சீனியர் கேட்டகிரியில் இருப்பதால் அவரா.. இவரா.. என கடந்த ஒரு வாரகாலமாக திமுக உட்கட்சி வட்டாரத்தில் விவாதம் நடந்து வந்தது. ஆனால் அதற்கு இன்று விடைகிடைத்துவிட்டது.

பதவிக்கு போட்டி
திமுகவை அண்ணா தொடங்கிய போது தலைவர் பதவியை பெரியாருக்காக காலியாக வைத்துவிட்டு பொதுச்செயலாளர் பதவியில் அமர்ந்தார். பின்னர் 1969-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்ணா மறைந்ததை அடுத்து நாவலர் நெடுஞ்செழியன் திமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றினார். கருணாநிதியும் அந்த பதவியை பிடிப்பதற்காக போட்டியில் குதிக்க ஆயத்தமானார். இதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படக்கூடாது என மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சி காரணமாக, தலைவர் பதவி உருவாக்கப்பட்டு திமுக தலைவரானார் கருணாநிதி.

கருத்துவேறுபாடு
ஒரு கட்டத்தில் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவின் பொதுச்செயலாளர் பதவியை துறந்து மக்கள் திமுக என்ற பெயரில் நாவலர் நெடுஞ்செழியன் தனிக் கட்சி தொடங்கினார். நாவலர் விட்டுச்சென்ற பொதுச்செயலாளர் பதவியை அன்பழகனை கொண்டு நிரப்பினார் கருணாநிதி. அப்போது திமுக பொருளாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் பொதுச்செயலாளர் பதவிக்கு வந்தது போல், இப்போது பொருளாளர் பதவியில் உள்ள துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு வர இருக்கிறார். அதாவது பழைய வரலாறு மீண்டும் திரும்புகிறது எனக் கூறலாம்.

4-வது நபர்
திமுக தொடங்கி 70 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இதுவரை அந்தக் கட்சியில் 3 பேர் மட்டுமே பொதுச்செயலாளராக இருந்திருக்கின்றனர். இப்போது தான் நான்காவதாக துரைமுருகன் அந்த பதவியில் அமரவுள்ளார். இதனிடையே பொதுச்செயலாளர் பதவி மீது திமுக மூத்த நிர்வாகியான டி.ஆர்.பாலுவுக்கும் ஒரு கண் இருந்தது, ஆனால் அதனை அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. துரைமுருகனும் டி.ஆர்.பாலுவும் ஒரே கேடரில் வருவதால் அவர்கள் இருவரையும் கண்ணியப்படுத்த வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின். இதனால் பொருளாளர் பதவிக்கு பாலுவை ஸ்டாலின் முன்னிறுத்தக் கூடும் எனக் கூறப்படுகிறது.

போட்டி குறைவு
திமுக பொதுச்செயலாளர் பதவி எப்படியும் துரைமுருகன் வசம் தான் செல்லும் என ஏற்கனவே நிர்வாகிகள் கணித்து வைத்திருந்தனர். இதனால் பெரியளவில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியில்லை. ஒரு சிலர் மட்டும் ஆ.ராசாவை பொதுச்செயலாளராக கொண்டு வர வேண்டும் என தூபம் போட்டனர். அதற்குள் சுதாரித்துக்கொண்ட திமுக தலைமை, துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார் என வெளிப்படையாகவே அறிவித்து தர்மசங்கடத்தை தவிர்த்துவிட்டது.

வேறுபாடு
திமுக பொதுச்செயலாளராக இதுவரை இருந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு அடைமொழி ஒன்று இருந்தது. அண்ணாவை பேரறிஞர் என்றும், நெடுஞ்செழியனை நாவலர் என்றும், அன்பழகனை பேராசிரியர் எனவும் கட்சியினர் அழைத்தார்கள். காரணம் பெயர் சொல்லி அழைப்பது மரியாதை குறைவு என்பதால் அடைமொழிகள் மூலம் அழைக்கப்பட்டு வந்தனர். ஆனால் இப்போது பொதுச்செயலாளர் ஆகும் துரைமுருகனுக்கு எந்த அடைமொழியும் இல்லை. இவை ஒன்று தான் பெரிய வேறுபாடாக கருதப்படுகிறதே தவிர மற்றபடி துரைமுருகனின் கட்சிப் பணிகளிலோ, சீனியாரிட்டியிலோ யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.












Click it and Unblock the Notifications