புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்வுக்கு இ-பதிவு முறை சேர்ப்பு.. என்னென்ன நிபந்தனைகள் முழு விவரம்
சென்னை: புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்வுக்கான இ- பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி திருமண நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு செய்ய வேண்டும். மணமகள், தாய் ,தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று மிகவும் உச்சகட்டம் அடைந்துள்ளது. இந்தியாவிலேயே தினசரி அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக மாறி உள்ளது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மே 10ம் தேதி தொடங்கி வரும் 24ம் தேதி காலை வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. அந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
அடையாள அட்டை இருந்தால் போதும்.. இ-பதிவு தேவையில்லை.. சென்னையில் இ-பதிவு முறையில் தளர்வுகள் அறிவிப்பு
இ பாஸ் வேண்டாம்
கடந்த மே 17ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலுமான போக்குவரத்துக்கு இ-பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த இ பதிவு முறை கடந்த ஆண்டு அமலில் இருந்த இ பாஸ் போல் கிடையாது என்றும், பதிவு செய்த உடனேயே யார் அனுமதிக்கும் காத்திருக்காமல் பயணிக்கலாம் என்றும் அரசு அறிவித்தது.
நான்கு காரணங்கள்
இதன்படி இ பதிவு செய்து பயணிக்க நான்கு வகையான காரணங்களுக்கு மட்டுமே அனுமதி தந்தது அரசு. அதாவது மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த காரியங்கள், திருமணம் ஆகிய காரணிகள் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இபதிவில் திருமணம் இல்லை
இந்நிலையில் கடந்த 17ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் பலரும் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று இ பதிவு செய்தனர். இதையடுத்து தமிழக அரசு இ-பதிவில் திருமணம் என்ற ஆப்சனை பலர் தவறாக பயன்படுத்துவதாக கருதி உடனே அந்த ஆப்சனை நீக்கியது. அதேநேரம் மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு ஆகிய காரணங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தது.
மீண்டும் சேர்ப்பு
அடுத்த நாள் இ பதிவில் திருமணத்தை சேர்த்த அரசு, உடனே மீண்டும் நீக்கிவிட்டது. இந்நிலையில் பொதுமக்கள் பலரின் கோரிக்கையை ஏற்று திருமணத்திற்கான இ பதிவு புதிய நிபந்தனைகளை விதித்து அதை அரசு அனுமதித்துள்ளது. திருமணத்திற்கான இ பதிவு முறை மற்ற முறைகளை போல் எளிதாக எல்லோரும் மேற்கொள்ள முடியாது. திருமண வீட்டார் மட்டுமே பதிவு செய்ய முடியாது.
என்னென்ன நிபந்தனைகள்
அரசு விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம். திருமண நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு செய்யப்பட வேண்டும். இ-பதிவின் போது திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்ற வேண்டும். திருமணவிழாவில் பங்கேற்பவர்கள் அத்தனை பேரின் வாகனங்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும். திருமண நிகழவிற்காக வரும் அனைத்து வாகனங்களின் எண்கள், ஓட்டுனர் பெயர், கைபேசி எண், பயணிப்போர் பெயர், ஒரு அடையாள ஆவணம் அவசியம் ஆகும். இத்துடன் மணமகன், மணமகள், தாய் ,தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ-பதிவை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அரசு நிபந்தனை விதித்துள்ளது.