தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில் ஒரு இடத்துக்கு செப்.13-ல் தேர்தல்- மகிழ்ச்சியில் திமுக
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில் ஒரு இடத்துக்கு மட்டும் செப்டம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3 ராஜ்யசபா இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர் முகமது ஜான். கடந்த மார்ச் மாதம் உடல்நலக் குறைவான் முகமது ஜான் காலமானார். பின்னர் சட்டசபை தேர்தலில் அதிமுக ராஜ்யசபா எம்.பி.க்களான வைத்திலிங்கம், கே.பி. முனுசாமி இருவரும் போட்டியிட்டு வென்றனர்.
வைத்திலிங்கம் ஒரத்த நாடு தொகுதி எம்.எல்.ஏ.வானார்; கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வானார். இதனையடுத்து இருவரும் ராஜ்யசபா எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் 3 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் காலியாக இருந்தன.

சட்டசபையில் கட்சிகள் பலம்
ராஜ்யசபா எம்.பி.க்களை எம்.எல்.ஏக்கள்தான் தேர்ந்தெடுப்பர். தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டசபையில் கட்சிகளின் பலம்: திமுக 133; காங்கிரஸ் 18; விசிக-4; சிபிஐ-2; சிபிஎம்-2; அதிமுக- 66; பாமக 5; பாஜக 4. சட்டசபையில் திமுக கூட்டணியின் பலம் அதிகமாக உள்ளது.

ஒரே நேரத்திலா தேர்தல்?
3 ராஜ்யசபா இடங்களுக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்றால் திமுக அணிக்கு 2 ராஜ்யசபா எம்.பி.க்களும் அதிமுக அணிக்கு 1 எம்.பி.யும் கிடைக்கலாம் என்கிற நிலைமை இருந்தது. டெல்லி மேலிடமும் 3 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் திமுக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

திமுக கோரிக்கை ஏற்பு
அத்துடன் 3 ராஜ்யசபா இடங்களுக்கும் தனித்தனியே தேர்தல் நடத்தப்பட வேண்டும்; இந்த தேர்தல்களை தாமதம் இல்லாமல் உடனே நடத்த வேண்டும் என்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் திமுகவின் டி.ஆர். பாலு, வில்சன் ஆகியோர் மனுவும் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று 3 ராஜ்யசபா இடங்களில் அதிமுகவின் முகமது ஜான் மறைவினால் ஏற்பட்ட காலி இடத்துக்கு செப்டம்பர் 13-ல் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

செப்.13-ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்
இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31-ந் தேதி கடைசிநாள். வேட்புமனுக்கள் மீது செப்டம்பர் 1-ல் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பர் 3-ந் தேதி கடைசிநாள். செப்டம்பர் 13-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். பின்னர் அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

2 இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்?
இதனைத் தொடர்ந்து எஞ்சிய 2 இடங்களுக்குமான தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் வைத்திலிங்கமும் கேபி முனுசாமியும் ஒரே நாளில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த 2 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறக் கூடும் என தெரிகிறது. அப்படி 2 இடங்களுக்கு தேர்தல் நடந்தாலும் அதிலும் திமுகவுக்கே 2 எம்.பி.க்கள் கிடைக்கும் நிலைதான் உள்ளது.












Click it and Unblock the Notifications