ஜனவரி 4 க்கு முன்பே! டிசம்பர் 27ல் அதிமுக மாவட்டச் செயலாளர்களை அவசரமாக சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: டிசம்பர் 27 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுக ஏற்கெனவே இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. ஆனால் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய கோவை செல்வராஜ், அதிமுக 4 பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது என கூறியிருந்தார்.
அதிமுக எங்களுக்குத்தான் என்பதை நிரூபிக்க ஆளாளுக்கு ஒரு முடிவை எடுத்து செயல்படுத்தி வருவதால் நடுநிலையாக உள்ள தொண்டர்கள் என்ன செய்யலாம் என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அதிமுக பொதுக் குழு
அதிமுகவில் பொதுக் குழு உறுப்பினர்களால் தான் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் தனக்கே அதிகாரம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி, ஆனால் ஓபிஎஸ்ஸோ அதிமுக விதிகளின்படி பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். பொதுக் குழு உறுப்பினர்களுக்கு இதில் வேலை இல்லை என கூறி வருகிறார்.

ஓபிஎஸ் தரப்பு
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியார் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒன்றிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்படி தமிழகம் முழுவதும் தங்கள் ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக ஓபிஎஸ் நியமித்துள்ள நிலையில் நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டுகிறார்.

அறிக்கை
இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்
இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே ஓபிஎஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
மாவட்டச் செயலாளர்களை கூட்டத்தை ஓபிஎஸ் கூட்டுவதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலுக்கு இன்னொரு கூட்டத்தை கூட்டுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

டிசம்பர் 27 இல் இபிஎஸ் தலைமையில் கூட்டம்
டிசம்பர் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அதிமுக வழக்கு வரும் ஜனவரி 4 ஆம் தேதி வாக்கில் தீர்ப்பு வெளியாகும் என தெரிகிறது. இதனால் அந்த தீர்ப்பு வெளியாவதற்குள் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டுகிறார்கள். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

எதிர்வினை
நாளை ஓபிஎஸ் தலைமையிலான கூட்டத்தில் என்ன செய்கிறார்கள் என பார்த்துவிட்டு டிசம்பர் 27 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்வினையாற்றும் என தெரிகிறது. அதிமுக விவகாரத்தில் தினம் ஒரு டிவிஸ்ட் நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications