இதெல்லாம் ரொம்ப தப்புங்க!- பிரியாணி கடையில் அராஜகம் செய்த திமுகவினர்.. கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: பிரியாணி கடை உரிமையாளரை தாக்கி கடையை சூறையாடிய விவகாரத்தில் திமுக கவுன்சிலரை தமிழ்நாடு அரசு பதவி நீக்கம் செய்யுமா? என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்லாவரம் அருகே திருநீர்மலையில் பிரியாணி கடை நடத்தி வருபவர் அனீஸ். இவரது கடைக்கு சென்ற ரவுடிகள் சுகுமார் மற்றும் தினேஷ், மாதம் ரூ.10,000 மாமூல் கேட்டு மிரட்டியுயதாக கூறப்படுகிறது.
கடை உரிமையாளரோ தன்னால் ரூ.10,000 தர முடியாது என்றும் ரூ.3,000 வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி பணத்தை கூகுள் பேவில் அனுப்பி இருக்கிறார்.

பிரியாணி கடை மீது தாக்குதல்
மீதம் ரூ.7,000 கேட்டு ரவுடிகள் மிரட்ட, தன்னால் அவ்வளவு தொகை வழங்க முடியாது என மறுத்துள்ளார் அனீஷ். ஆத்திரமடைந்த சுகுமாறும், தினேஷும் அனீஸை தாக்கியதுடன் கற்களை வீசி கடையை சூறையாடினர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார், பிரியாணி கடைக்கு நேரில் சென்று பார்வையிட்டு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

ரவுடிகள் கைது
இதனையடுத்து தினேஷ், சுகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அத்துடன் தொடர்ந்து பல்லாவரம், பம்மல் பகுதிகளில் உள்ள கடைகளில் இருவரும் மாமூல் வசூலித்து வந்திருக்கின்றனர்.

திமுக கவுன்சிலரின் மைத்துனர்
இதில் கைதான தினேஷ் என்பவர் தாம்பரம் மாநகராட்சி 33 வது திமுக கவுன்சிலர் சித்ரா தேவியின் கணவருடைய தம்பி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, திமுக தலைமை சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "தமிழகம் முழுவதும் திமுக கவுன்சிலர்கள் தொடர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் பணி செய்யாமல் மாறாக மாமூல் வசூலிக்கும் பணியும், தொடர்ந்து ரவுடியிசமும் செய்து வந்தால் மக்களே அதற்கு தக்க தண்டனையும் கொடுப்பார்கள், மக்களை அச்சுறுத்தி வரும் இத்தகைய நபர்கள் மீது கண்துடைப்பு கைது நாடகமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சர்ச்சைக்குரிய கவுன்சிலர்களை பதவி நீக்கம் செய்யுமா இந்த திமுக அரசு?" எனக் குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications