பாலூட்டும் தாய்மார்கள் அறையை சீர்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் -எடப்பாடி பழனிசாமி
சென்னை: பாலூட்டும் தாய்மார்கள் அறையை சீர்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் 1,000க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் அறைகள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக அவர் வேதனைத் தெரிவித்துள்ளார்.
பாலூட்டும் தாய்மார்ளுக்கான அறைகள் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் பதிவு வருமாறு;

பெண்களுக்கான திட்டம்
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உருவான சீர்மிகு திட்டங்கள்தான் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தாலிக்குத் தங்கம், பெண்களின் சுமைகளை குறைப்பதற்குக் கொண்டுவரப்பட்ட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

பாலூட்டும் தனி அறைகள்
அந்த வகையில் கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள், வெளியூர்களுக்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வரும் போது, கைக்குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு ஏதுவாக மறைவிட வசதியினை பேருந்து நிலையங்களில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற தாய்மை உணர்வுடன், உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் உருவான திட்டம் தான் பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கென்று பாலூட்டும் தனி அறைகள் திட்டம்.

விடியா ஆட்சியில்
2015-ஆம் ஆண்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கென்று கொண்டுவரப்பட்ட இத்திட்டம் இந்த விடியா ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை எந்தவித பராமரிப்பின்றியும், இருக்கைகள் சேதமடைந்த நிலையிலும், தூர்நாற்றம் வீசும் அவல நிலையிலும் மூடிக் கிடக்கிறது. மேலும், அப்பகுதிகள் அசுத்தமாகவும் காணப்படுகிறது.

அதிமுக அரசு திட்டங்கள்
நாங்கள் கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா காண்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிப் போட்டுள்ளது. மக்கள் ஏற்றுக்கொண்ட திட்டங்களை முடக்கும் போது, அவர்களுடைய வேதனையின் வெளிப்பாட்டை உங்களுக்கு, தேர்தல் மூலம் விரைவில் திருப்பித் தருவார்கள். இது வெகு தொலைவில் இல்லை.

சீர் செய்க
தமிழகத்தில் பேருந்து நிலையங்களிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் எவ்வித பயன்பாடுமின்றி பூட்டிக் கிடக்கும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலை மாற வேண்டும். தாய்மார்கள் போற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications