ஓபிஎஸ் சொன்ன சீக்ரெட்.. ஷாக் ஆன எடப்பாடி.. ‘ஃபர்ஸ்ட் டைம்’ .. ஈபிஎஸ் தரப்பில் தொற்றிக்கொண்ட பயம்!
சென்னை : சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவர் எடப்பாடி அணியிலிருந்து ஓபிஎஸ் பக்கம் தாவியிருக்கும் நிலையில், மேலும் பல 'ஸ்லீப்பர் செல்கள்' வர இருப்பதாக ஓபிஎஸ் பொடி வைத்துப் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைந்த நிலையில், ஈபிஎஸ் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி அணியில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை, தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள், இன்னும் பலர் வர இருக்கிறார்கள் எனத் தெரிவித்து வரும் நிலையில், ஓபிஎஸ் நேற்றுச் சொன்ன விஷயம் எடப்பாடி பழனிசாமி தரப்பை கதிகலங்கச் செய்துள்ளது.

தீர்ப்பால் ஓங்கிய கை
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் என்றும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு பிறகு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். மேலும், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுத்தார். அவர்களிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளது.

நிராகரித்த ஈபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, அவருடன், மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என தெரிவித்தார். இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. வரும் ஆக. 30 அல்லது செப். 1 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி தாவும் நிர்வாகிகள்
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் என பல்வேறு நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நேற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன், சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஈபிஎஸ் அணிக்கு ஷாக்
தொடர்ந்து அடுத்தடுத்து, நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவி வருவது, எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என அணி மாறி வந்த நிலையில், முதன்முதலாக சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவர் ஈபிஎஸ் அணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவியுள்ளது தான் எடப்பாடி பழனிசாமி டீமுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

பொடி வைத்துப் பேசிய ஓபிஎஸ்
மேலும், அதிமுகவை ஒருங்கிணைக்க புரட்சிப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், கட்சியின் நலன் கருதி சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் பலர் தன் பக்கம் வர உள்ளார்கள். அது யார் என்பது பரம ரகசியம் என ஓ.பன்னீர்செல்வம் பொடி வைத்துப் பேசியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கலில் ஈபிஎஸ்
சிட்டிங் எம்.எல்.ஏவை தூக்கியுள்ள ஓபிஎஸ், 'இன்னும் பலர் வருவார்கள்.. யார் என்பது பரம ரகசியம்' என கண்ணடித்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. வேறு யாரெல்லாம் ஓபிஎஸ் தரப்போடு தொடர்பில் இருக்கிறார்கள் எனத் தெரியாமல் விழிபிதுங்கிப் போயிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications